Thursday, December 31, 2009

சென்னையில் 25 லட்சம் இலக்கை எட்டியது ஹூண்டாய்

சென்னை: சென்னை [^]யி்ல் உள்ள ஹூண்டாய் தொழிற்சாலையில் தயாராகும் கார்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை எட்டியுள்ளது.

கடந்த 1998ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் முதலில் சான்ட்ரோ மாடல்களை ஹூண்டாய் தயாரித்தது. உள்நாடு மற்றும் வெளிநாட்டுச் சந்தையில் மிகவும் வரவேற்பை பெற்ற சான்ட்ரோ மாடல்களில் மட்டும் 15 லட்சம் விற்பனையாகியுள்ளது.

இதுகுறித்து ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் விற்பனை பிரிவு துணைத் தலைவர் அர்விந்த் சக்ஸேனா கூறுகையில், 'அதிக கார் தயாரிப்பில் நாட்டின் இரண்டாம் இடத்திற்கு வந்துள்ளது மட்டுமல்லாமல், மிக துரிதமாக இந்த இலக்கை அடைந்ததில் மிகவும் பெருமை கொள்கிறோம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை ஹூண்டாய் ஏற்றுமதி செய்வதற்கு முன்பாக, சர்வதேச சந்தையில் இந்திய தயாரிப்பு கார்கள் குறிப்பிடத்தக்க அளவு கூட இல்லை. ஆனால் தற்போது இந்திய தயாரிப்பு கார்களுக்கு தரம் மற்றும் திறன் அடிப்படையில் வெளிநாடுகளில் மதிப்பு பெருமளவு கூடியுள்ளது' என்றார்.

இந்திய கார் சந்தையில் 20.5 சதவீதத்தை கொண்டுள்ள ஹூண்டாய் நிறுவனம், தற்போது தனது இரண்டு தொழிற்சாலைகளில் சேர்த்து ஆண்டுக்கு மொத்தம் 6,00,000 கார்களை தயார் செய்கிறது.

Source:thatstamil.in

ஜனவரி 10 முதல் 'சென்னை சங்கமம்'

சென்னை: 'சென்னை சங்கமம்' கலைவிழா சென்னையில் வரும் ஜனவரி 10ம் தேதி துவங்கி ஒரு வாரம் நடைபெறும் என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.

'சென்னை சங்கமம்' ஒருங்கிணைப்பாளரும், எம்.பி.யமான கவிஞர் கனிமொழி இதுகுறித்து தெரிவித்ததாவது:

தமிழ் மையமும், தமிழக அரசு சுற்றுலா வளர்ச்சி-பண்பாட்டுத் துறையும் இணைந்து வழங்கும் சென்னை சங்கமம் 4ம் ஆண்டு கலைவிழாவின் தொடக்க விழா சென்னை தீவுத்திடலில் 10ம் தேதி மாலை 6.30 மணிக்கு நடக்கிறது.

முதல்வர் கருணாநிதி விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில், 16 கலைவடிவங்களை இணைத்து ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தலைப்பான `பிறப்பொக்கும்' என்பதையொட்டியே சங்கமம் தொடக்க விழாவும் அமைகிறது.

ஜனவரி 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை சென்னை சங்கமம் கலை விழா பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரை, மெரினா லேடி வெலிங்டன் கல்லூரி அரங்கு, தீவுத்திடல் அரங்கு, மைலாப்பூர் நாகேஸ்வர ராவ் பூங்கா உட்பட 17 இடங்களில் மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை நடக்கிறது.

கடந்த ஆண்டு தியாகராய நகர் வெங்கட் நாராயணா சாலையில் விடிய, விடிய இசை, நடனம் போன்ற கொண்டாட்டம் நடந்ததைப் போல இந்த ஆண்டு அண்ணாநகர் பகுதியிலும் நடைபெறும்.

இந்த ஆண்டு சென்னை சங்கமம் கலைவிழாவில் புதிதாக வர்த்தக நிறுவனங்கள், கல்லூரிகளுக்கு இடையேயான நாட்டுப்புற நடனப் போட்டி எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெறும். நடனப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளின் நடன நிகழ்ச்சிகள் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.

சங்கமம் விழாவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளான பொம்மலாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், மாட ஆட்டம், கோலாட்டம், புலி ஆட்டம், ஒக்கிலி ஆட்டம், காவடி ஆட்டம், பறை ஆட்டம், கிழவன்-கிழவி ஆட்டம், களியாட்டம், கள்ளி ஆட்டம், களியலாட்டம், கை சிலம்பாட்டம், சிக்காட்டம், சக்கைக்குச்சி ஆட்டம், ஆழியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

கடந்த ஆண்டு போலவே திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, மணப்பாறை முறுக்கு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், திண்டுக்கல் வேணு பிரியாணி, பள்ளிப்பாளையம் சிக்கன், காரைக்குடி இட்லி, ஜிகர்தண்டா போன்ற தல உணவு வகைகளும் சங்கமம் விழாவில் கிடைக்கும்.

சென்னை சங்கமம் விழாவின் ஒருபகுதியாக ஜனவரி 12ம் முதல் 16ம் தேதி வரை பிலிம்சேம்பரில் இலக்கிய நிகழ்ச்சி நடக்கிறது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கவிஞர் வைரமுத்து, எழுத்தாளர் ஜெயகாந்தன் கலந்துகொள்கின்றனர்.

'நம்ம் ஈரோடு, திருப்பூர் கூடல்':

சென்னை சங்கமம் போல ஈரோட்டில் ஜனவரி 2, 3, 4 தேதிகளில் `நம்ம ஈரோடு' என்ற பெயரில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. திருப்பூரில் ஜனவரி 29, 30, 31 தேதிகளில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு `திருப்பூர் கூடல்' என்று பெயர் வைத்துள்ளனர்.

இதுபோல திண்டுக்கல்லில் ஜனவரி 26 முதல் 30ம் தேதி வரை கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விருதுநகரிலும் கலை நிகழ்ச்சி நடத்தப் போவதாக சொல்லியிருக்கிறார்கள் என்று கனிமொழி கூறினார்.

Source:thatstamil.in

சென்னையில் மாபெரும் பூக்கள் கண்காட்சி

சென்னை: சென்னையில் மாபெரும் மலர்க் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மலர்க் கண்காட்சி சுற்றுலாப் பயணிகளையும், உள்ளூர் மக்களையும் வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த மலர்க் கண்காட்சியின் முக்கிய அம்சமே, காதல் சின்னமான தாஜ்மஹால், ஈபிள் டவர், இந்தியா கேட், பிரமிட் ஆகியவற்றின் வடிவில் அமைக்கப்பட்டுள்ள மலர் அலங்காரமே. பல்வேறு பூக்களைக் கொண்டு இவை அழகுற அமைக்கப்பட்டுள்ளன.

சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த மலர்க் கண்காட்சியும், மலர் அலங்காரமும் அமைக்கப்பட்டுள்ளதாக மலர்க் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த மலர்க் கண்காட்சியில் 350க்கும் மேற்பட்ட வகையான மலர்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில வெளிநாட்டு மலர்களாகும். வருகிற ஞாயிற்றுக்கிழமை வரை இந்த மலர்க் கண்காட்சி நடைபெறுகிறது.

Source:thatstamil.in

3 நாட்களில் ரூ.100 கோடி குவித்த 3 இடியட்ஸ்!

ஆமிர் கான் நடித்துள்ள 3 இடியட்ஸ் படம் திரையிட்ட இடமெல்லாம் வசூலைக் குவித்து வருகிறது. வெளியான மூன்றே தினங்களில் ரூ 100 கோடியைக் குவித்துள்ளது இந்தப் படம்.

இது ஆமிர்கானின் முந்தைய படமான கஜினியை விட 30 சதவிகிதம் அதிக வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

உலகமெங்கும் 2000 திரையரங்குகளில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான 3 இடியட்ஸ். முன்னாபாய் தந்த இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில், விதுவினோத் சோப்ரா தயாரிப்பில் உருவான படம் இது. ஒரு இந்திப் படம் இந்த அளவு அதிக பிரிண்டுகளுடன் உலகம் முழுக்க ரிலீசானது இதுவே முதல் முறை.

ரிலீசுக்கு முந்தைய தினம் நடந்த பிரிமியர் ஷோவில் மட்டும் இந்தப் படம் ரூ 9 கோடி வசூலைப் பெற்றது.

ரிலீஸ் ஆன முதல் மூன்று தினங்களில் மட்டும் இந்தப் படம் ரூ 100 கோடியை வசூலித்துள்ளது. குறிப்பாக வட அமெரிக்கா மற்றும் கனடாவில் பெரும் வசூலைக் குவித்து வருகிறது.

பொதுவாக ஆமிர் கானின் படங்களுக்கு பிரிட்டனில் பெரிய மார்க்கெட் கிடையாது. கஜினி கூட அங்கே சராசரிப் படம்தான். ஆனால் இந்த முறை 3 இடியட்ஸ் அங்கும் ஹிட் படமாகியுள்ளது (ஆனால் இன்று வரை பிரிட்டனில் அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் இரண்டுதான். ஒன்று ரஜினி நடித்த சிவாஜி - தி பாஸ், அடுத்தது ஷாரூக்கானின் கபி அல்வித நா கெஹ்னா).

மும்பை சினிமாக்ஸ் மல்டிப்ளெக்ஸில் இந்தப் படத்துக்கு 92 முதல் 95 சதவிகித ரசிகர்கள் குவிந்தனர், ஞாயிற்றுக் கிழமை. அதே நேரம் அவதார் படம் இங்கு 90 சதவிகிதத்துக்கும் மேலான ரசிகர்களுடன் சக்கைப் போடு போடுகிறது.

வெர்சோவா ப்ராபர்ட்டியில் உள்ள சினிமாக்ஸ் மல்டிபிளெக்ஸில் 3 இடியட்ஸ் படம் ஒரு நாளைக்கு 25 காட்சிகள் ஓடுகிறது. வார நாட்களிலேயே இதில் சராசரியாக 60 சதவிகிதம் அளவு ரசிகர்கள் வருகிறார்களாம்.

ஆனால் இங்கும் அவதாருக்குதான் முதலிடம். 95 சதவிகித ரசிகர் கூட்டம் குவிகிறதாம் அவதாருக்கு.

Source:thatstamil.in

சென்னை-நெல்லையில் மக்களை முடக்கும் மர்ம காய்ச்சல்

சென்னை & நெல்லை: சென்னையிலும், நெல்லையிலும் மக்களை முடக்கிப் போடும் மர்மக் காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதில் உற்பத்தியாகும் வகை கொசுக்கள் மூலம் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த காய்ச்சலின் பாதிப்பு நெல்லை மாவட்டத்தில் அதிகம் உள்ளது.

உடல் வலி, தலைவலி, சோர்வு, மூட்டு இணைப்புகளில் வீக்கம், தொடர் காய்ச்சல் என்று வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் நடமாட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட சிக்குன்குனியாவைப் போல இது உள்ளது.

ஏற்கனவே மதுரை உள்ளிட்ட பகுதிகளில் சிக்குன்குனியா மக்களை வதைத்துக் கொண்டிருக்கிறது.

தற்போது நெல்லைப் பகுதியில் பரவி வரும் இந்த வைரஸ் காய்ச்சல் ஒரு வாரத்திற்கு படாதபாடு படுத்தி விடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்

இவ்வாறு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்க சுகாதாரத் துறையும் களம் இறங்கியுள்ளது. வீடு வீடாக சென்று கொசு மருந்துகளை தெளித்து கொசுக்கள் உற்பத்தி செய்யப்படுவதை தடுத்து வருகிறது. ஆனால் மேலப்பாளையம் உள்ளிட்ட சில பகுதிகளில் சுகாதார சீர்கேடு காரணமாக அதிகளவு மக்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ஆங்காங்கே ஏற்படும் உயிர் பலிகள் வைரஸ் காய்ச்சல் குறித்த பீதியை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது. ஆனால் இந்த காய்ச்சல் உயிர்களை காவு வாங்க வாய்ப்பில்லை என்று சுகாதார துரையினரின் கூறி வருகின்றனர். காய்ச்சலை கட்டுபடுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

சென்னையிலும்...

இதேபோல சென்னையிலும் இந்த மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த காய்ச்சலால் தாக்கப்பட்டவர்களால் நடமாடக் கூட முடியாத அளவுக்கு முடக்கிப் போட்டு விடுகிறது.

சிக்குன் குனியா காய்ச்சல் பரவி பொதுமக்களை எப்படி வாட்டி எடுத்ததோ, அதேபோல தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலாலும் பொதுமக்கள் கடுமையான அவதிக்குள்ளாகிறார்கள். மூட்டு வலியில் தொடங்கி கை விரல்கள், கழுத்து, முதுகு தண்டு என உடலின் அத்தனை பாகங்களிலும் அடித்து நொறுக்கி போட்டது போல ரணம் ஏற்படுகிறது.

இதனால் வயதானவர்களும், குழந்தைகளும் வலி தாங்க முடியாமல் துடித்துப் போய் விடுகின்றனர்.

வீட்டில் யாராவது ஒருவருக்கு வந்து விட்டால் போதும், அவர் மூலமாக வீட்டில் உள்ள மற்றவர்களையும் இது தாக்கி விடுகிறது.

இந்த மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை நாடி ஓடுகிறார்கள். வழக்கமாக தொற்று நோய்கள் படு வேகமாக பரவும் வட சென்னையில்தான் தற்போது இந்த மர்மக் காய்ச்சலும் அதி வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது.

கொடுங்கையூர், வியாசர்பாடி, முத்தமிழ் நகர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் இந்த வைரஸ் காய்ச்சல் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தலைநகரையும், நெல்லையாயும் பாடாய்ப்படுத்தி வரும் இந்தக் காய்ச்சலைத் தடுக்கவும், இதன் பரவலை ஒடுக்கவும், மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அரசு பகிரங்கமான, வெளிப்படையான முறையில் நடவடிக்கைகளை துரித கதியில் மேற்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிக்குன்குனியாவை விட மோசமான பாதிப்புகளை இந்தக் காய்ச்சல் ஏற்படுத்தி விடும் என்று மக்கள் கருதுகிறார்கள்.

source:thatstamil.in

தெலுங்கானா பந்த்-165 ரயில்கள்-9000 பஸ்கள் ரத்து

ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானா கூட்டு நடவடிக்கைக் குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று இன்று தெலுங்கானாவில் பந்த் நடந்து வருகிறது. இதன் காரணமாக 165 ரயில்கள், 9000 பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா பகுதி ஸ்தம்பித்துள்ளது.
இன்று காலை பந்த் தொடங்கியபோதிலும் கூட நேற்று இரவிலிருந்தே பந்த் சூழ்நிலை ஆரம்பமாகி விட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவிலிருந்தே தெலுங்கானா பிராந்தியம் முழுவதும் ஆந்திர மாநில போக்குவரத்துக் கழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. இதேபோல ரயில்களும் கூட நிறுத்தப்பட்டு விட்டன.

மொத்தம் 165 ரயில்களும், 9000 பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானா முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா பகுதியில் எந்த பஸ்சும் ஓடவில்லை. அதேபோல விஜயவாடா நோக்கிச் செல்லும் பஸ்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பஸ்களும், ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் கிட்டத்தட்ட 30 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட டவுன் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பெரும் பாதிப்படைந்துள்ளனர். ஏராளமானோர் தங்களது இருப்பிடங்களுக்குப் போக முடியாமல் தவித்துக் கொண்டுள்ளனர்.

தனியார் வாகனங்களும், ஆட்டோக்களும் மக்களிடம் பெரும் பணத்தைப் பறித்துக் கொண்டு அவர்களை ஏற்றிச் செல்கின்றன.

ஹைதராபாத் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதேபோல தெலுங்கானா முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவப் படையினரும் நிறுத்தப்பட்டுள்ளனர். ஹைதராபாத் மற்றும் தெலுங்கானா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை தெலுங்கானா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க காங்கிரஸ், தெலுங்கு தேசம் [^], பாஜக, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி [^], பல்வேறு தெலுங்கானா அமைப்புகள், மாணவர் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு கூடி விவாதிக்கவுள்ளது.

கமிட்டி அமைக்க மன்மோகன், சோனியா முடிவு...

இதற்கிடையே, நேற்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி [^] உள்ளிட்டோர் அடங்கிய காங்கிரஸ் முக்கியக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் தெலுங்கானா விவகாரத்தை ஆராய கமிட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

ராவ் நிராகரிப்பு...

ஆனால் கமிட்டி அமைத்தால் அதை ஏற்க மாட்டோம் என சந்திரசேகர ராவ் [^] கூறி விட்டார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு எங்களுடன் நேரடியாகப் பேச வேண்டும். அதற்கு நாங்களும் தயாராகவே இருக்கிறோம். கோரிக்கை குறித்து மத்திய அரசே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தி தனி மாநிலம் குறித்த இறுதியான அறிவிப்பை வெளியிட வேண்டும்.

ஆனால், இதுதொடர்பாக கமிட்டி எதையாவது அமைத்தால் அதை நாங்கள் ஏற்க மாட்டோம். கமிட்டியுடன் பேச நாங்கள் தயாராக இல்லை. இது நேரத்தை வீணடிக்கும் செயல். இதனால் எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

தெலுங்கானா மக்களின் பொறுமையை இனிமேலும் சோதித்துப் பார்க்க முயற்சிக்கக் கூடாது. எங்களுடன் பேச டெல்லி தயாராக இருந்தால் நாங்களும் தயார்தான். கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா தரப்பையும் பேச்சுவார்த்தைக்கு தாராளமாக அழைக்கலாம். அந்த அளவுக்குத்தான் எங்களது பொறுமை உள்ளது.

எங்களிடம் போதுமான அறிவுஜீவிகள், நிபுணர்கள் உள்ளனர். இதுகுறித்து இன்றைய கூட்டு நடவடிக்கைக் குழுவில் விவாதித்து பிரதிநிதிகளையும் அறிவிக்கவுள்ளோம் என்றார் ராவ்.

தெலுங்கானா: அனைத்துக் கட்சிக் கூட்டம்:

இந் நிலையில் தெலுங்கானா விவகாரம் தொடர்பாக படு லேட்டாக புத்தி வந்துள்ள மத்திய அரசு, அனைத்துக் கட்சிகளையும் அழைத்து இதுகுறித்து விவாதிக்க தீர்மானித்துள்ளது.

முதலிலேயே அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, ஆலோசனைகளைக் கேட்டு அதன் பிறகு தெலுங்கானா தனி மாநிலம் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடாமல் தான் தோன்றித்தனமாகவும், அரை வேக்காட்டுத்தனமாகவும் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என நள்ளிரவில் அறிவித்து ஆந்திராவை இரு துண்டுகளாக்கி அந்த மாநிலத்தையே முடக்கி விட்டது.

தற்போது இந்த விவகாரத்தை எப்படி முடிப்பது என்று தெரியாமல் தட்டுத் தடுமாறி வருகிறது மத்திய அரசு. இந்த நிலையில் பேசாமல் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி ஆலோசனை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாம். இந்த வார இறுதியில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

Source:thatstamil.in

சந்திர கிரகணத்தில் பிறக்கிறது புத்தாண்டு

சென்னை: நாளை ஆங்கில புத்தாண்டு பிறக்கும் நள்ளிரவு நேரத்திலேயே சந்திர கிரகணமும் ஏற்பட உள்ளது.

இது குறித்து சென்னை பிர்லா கோளரங்க இயக்குநர் அய்யம் பெருமாள் கூறுகையி்ல்,

31ம் தேதி நள்ளிரவு சந்திர கிரகணம் ஏற்படுகிறது. 12.21 மணி முதல் 1.24 வரை சந்திரகிரகணம் நடக்கிறது. சென்னையில் 80 சதவீதம் இந்த சந்திர கிரகணத்தை பார்க்க முடியும்.

சாதாரண கண் கொண்டே இதனை பார்க்கலாம். எனினும் கிரகணத்தை துல்லியமாக காண அதற்குரிய கண்ணாடி அவசியம். இதற்கான ஏற்பாடுகள் பிர்லா கோளரங்கில் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல ஜனவரி 15ம் தேதி கங்கண சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரியனின் மையப்பகுதி இருளாகவும் சுற்றி ஒளிவட்டம் தோன்றுவதும் கங்கண சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது.108 ஆண்டுகளுக்கு பிறகு இந்த கிரகணம் உண்டாகிறது.

கன்னியாகுமரியில் இதை முழு அளவில் காணலாம். சென்னையிலும் 80 சதவீதம் இந்த கிரகணத்தை காணலாம். ஆனால் சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது. இதற்காக 10,000 சிறப்பு கண்ணாடிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இது போன்ற சூரிய கிரகணம் 1872ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி 1901 நவம்பர் மாதம் 11ம் தேதியும் உண்டானது. அதன் பிறகு தற்போது தான் நிகழ உள்ளது. இதன் பிறகு மீண்டும் 2019ம் ஆண்டில்தான் நிகழும் என்றார்.

புத்தாண்டு பிறக்கும் சயமத்தில் நள்ளிரவு பார்டிகள், கும்மாளம் ஒரு பக்கம் நடந்தாலும் கோயில்களில் விசேஷ பூஜைகளும் நடைபெறுவது வழக்கம்.

ஆனால், இம்முறை அதே நேரத்தில் சந்திர கிரகணம் ஏற்படுவதால் கோயில்கள் மூடப்பட்டிருக்கும்.

புத்தாண்டும், சந்திரகிரகணமும் ஒன்றாக வருவது இனி 2028ம் ஆண்டிலும், 2066ம் ஆண்டிலும் தான் நடக்கும். ஆனால், சந்திர கிரகணம் பற்றிய தகவல் தெரிந்த 1901ம் ஆண்டில் இருந்து இதுவரை புத்தாண்டு தினத்தில் ஏற்பட்டதில்லை என்று வானவியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Source:thatstamil.in

இந்தியாவில் தாக்கப்படலாம்-அமெரிக்கர்களுக்கு எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்தியாவில் அமெரிக்க குடிமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக தெலுங்கானாவில் நடந்து வரும் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு தீவிரவாதிகள் அமெரிக்கர்களைத் தாக்கலாம். எனவே இந்தியாவுக்கு செல்லும்போது கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க மக்களுக்கு அந்த நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏதாவது ஒரு நாட்டில் லேசான பிரச்சினை என்றாலும் கூட அந்த நாட்டுக்குப் போக வேண்டாம் எனக் கூறுவது அமெரிக்காவின் வழக்கம்.

அந்த அடிப்படையில் தற்போது ஆந்திராவில் தெலுங்கானா பிரச்சினை பெரிதாகி வருவதைத் தொடர்ந்து ஆந்திராவுக்குப் போக வேண்டாம் என சமீபத்தில் தனது குடிமக்களுக்கு அது அறிவுறுத்தியிருந்தது. இந்த நிலையில் இந்தியாவுக்குப் போகும்போது கவனத்துடன் இருக்குமாறு அமெரிக்க குடிமக்களுக்கு ஒபாமா அரசு புது எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மிகக் குறுகிய காலத்தில் அமெரிக்க அரசு விடுத்துள்ள 3வது சுற்றுலா அட்வைசரி இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில், இந்தியாவில் அமெரிக்க குடிமக்கள் மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு வருவது குறித்து அமெரிக்க அரசுக்கு தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

தீவரவாதிகளும், அவர்களது அனுதாபிகளும், அமெரிக்கர்களையும், மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களையும் சுற்றுலாவுக்கு வரும்போது தாக்கும் சம்பவங்கள் முன்பே நடந்துள்ளன.

தற்போது இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் தனி மாநிலம் கோரி பெரும் போராட்டம் நடந்து வருகிறது. இதை தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகமா பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே ஆந்திராவுக்குப் போவதை அமெரிக்கர்கள் தவிர்க்க வேண்டும். இந்திய பயணத்தையும் மறு பரிசீலனை செய்வது நல்லது. அப்படியே போனாலும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

தற்கொலை படை தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல்கள் கிடைத்துள்ளன.
மும்பை பாணியில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர். எனவே, இந்தியாவில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்புடன் பயணம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை ஜனவரி 31ம் தேதி வரை அமலில் இருக்குமாம்.

இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், ஹோட்டல்கள், ரெஸ்டாரென்ட்டுகள், பொழுது போக்கு இடங்கள் உள்ளிட்டவற்றுக்குப் போவதற்கு முன்பு உள்ளூரில் (இந்தியாவில், மாநிலங்களில்) வெளியிடப்படும் காவல்துறை எச்சரிக்கை செய்திகளைப் பார்த்துக் கொண்டு பின்னர் செல்ல வேண்டும் எனவும் அமெரிக்க அரசு தனது குடிமக்களை எச்சரித்துள்ளது.

Source: thatstamil.in

நடிகர் விஷ்ணுவர்தன் மரணம்

மைசூர்: கன்னட திரையுலகின் சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான விஷ்ணுவர்தன் புதன்கிழமை அதிகாலை காலமானார்.

மைசூரில் தனது வீட்டில் அதிகாலை சுமார் 2.30 மணிக்கு விஷ்ணுவர்தனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சுமார் அதிகாலை 3 மணிக்கு விஷ்ணுவர்தனின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் கூறினர். இதையடுத்து அவரது உடல் பெங்களூர் கொண்டு வரப்பட்டது.

விஷ்ணுவர்தனின் மரணம், கர்நாடகாவில் அவரின் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.

விஷ்ணுவர்தனின் மனைவியும், நடிகையுமான பாரதி மற்றும் வளர்ப்பு மகள்கள் கீர்த்தி, சந்தனா ஆகியோருக்கு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆறுதல் கூறிய வண்ணம் உள்ளனர்.

வம்சவிருக்ஷா படத்துக்காக தேசிய விருது பெற்ற விஷ்ணுவர்த்தன் விடுதலை, ஸ்ரீராகவேந்திரா உள்பட சில படங்களில் ரஜினியுடன் நடித்துள்ளார்.

லட்சுமி இயக்கிய மழலை பட்டாளம் தமிழ் படத்தில் இவர் தான் கதாநாயகனாக நடித்தார்.

200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஷ்ணுவர்த்தன் வித்தியாசமான பரிணாமங்களை வெளிப்படுத்தியவர்.

விஷ்ணுவர்த்தன் கடைசியாக நடித்து முடித்த படம் ஆப்தரக்ஷா. இது சந்திரமுகியின் 2ம் பாகமாகும். இந்தப் படத்தை பி. வாசு இயக்கினார். அடுத்த மாதம் இந்தப் படம் திரைக்கு வரவுள்ளது. இதையடுத்து மாஸ்டர் என்ற படத்தில் நடித்து வந்த நிலையில் மரணமடைந்துள்ளார்.

பெங்களூரில் ஜெயநகர் 4வது பிளாக்கில் உள்ள அவரது இல்லத்தில் விஷ்ணுவர்தனின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

ஏராளமான ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் குவிந்ததால் அவரது உடல் ஊர்வலமாக பசவனகுடி நேசனல் கிரவுண்டுக்கு சாம்ராஜ் நகர் வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

போலீஸ் துப்பாக்கிச் சூடு:

அங்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் ஒரு பிரிவினர் வன்முறையில் ஈடுபட்டதால் போலீசார் வானை நோக்கி 20 ரவுண்டுகள் சுட்டு கூட்டத்தைக் கலைத்தனர். பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மாலை மைசூர் ரோடு அருகே உள்ள உத்தரஹள்ளி அபிமான் ஸ்டுடியோவில் அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடந்தது.

பெங்களூரில் பதற்றம்:

விஷ்ணுவர்தன் மறைவை அடு்த்து, பெங்களூரின் பல பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. ஜெயநகர், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து அந்தப் பகுதிகளிலும் பனசங்கரியிலும் கடைகள், வர்த்தக வளாகங்கள் மூடப்பட்டன. காந்தி பஜார் பகுதியில் ஐஎன்ஜி வைஸ்யா வங்கியின் ஏடிஎம் அடித்து நொறுக்கப்பட்டது.

திரைப்படங்கள் ரத்து:

இந் நிலையில் கர்நாடகம் முழுவதும் திரையரங்குகளில் இன்று காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு படப்பிடிப்புகளும் ரத்தாகியுள்ளன.

விஷ்ணுவர்தன் ரசிகர் தற்கொலை:

இந் நிலையில் விஷ்ணுவர்தன் மரணமடைந்த துக்கத்தில் அதிகமாகக் குடித்த வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். அவரை காப்பாற்றப் போன நண்பரும் உயிரிழந்தார்.

மைசூர் மாவட்டம் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சோமண்ணா (23), விஷ்ணுவர்தனின் தீவிர ரசிகர். இன்று காலை விஷ்ணுவர்தன் மரணமடைந்தார் என்ற செய்தியை கேட்டவுடன் மனம் உடைந்த சோமண்ணா அளவுக்கதிகமாக மதுபானம் குடித்துள்ளார்.

இந் நிலையில் திடீரென வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குதித்துவிட்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரின் நண்பர் குண்ணய்யா (28) சோமண்ணாவை காப்பாற்ற பின்னாளேயே கிணற்றில் குதித்துள்ளார். ஆனால் இருவரும் வெளியே வரவில்லை. தகவலறிந்து போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டனர்.

Source: thatstamil.in

Wednesday, December 30, 2009

அல்-கொய்தா தீவிரவாதிகள் எங்கிருந்தாலும் ஒழித்துக் கட்டுவோம்- ஒபாமா

வாஷிங்டன்: தீவிரவாதிகள் [^] உலகின் எந்த இடத்தில் இருந்துகொண்டு சதி திட்டங்களை தீட்டினாலும் அவர்களை அமெரிக்கா [^] ஒழித்துக்கட்டும் என அதிபர் ஒபாமா எச்சரித்துள்ளார்.

தற்போது ஹவாயில் விடுமுறையை கழித்து வரும் அமெரிக்க அதிபர் ஒபாமா, அமெரிக்க மக்களுக்கு தொலைக்காட்சி மூலம் உரையாற்றியுள்ளார்.

டெட்ராய்ட் நகருக்கு சென்ற அமெரிக்க விமானத்தை நடுவானில் தகர்க்க தீவிரவாதிகள் தீட்டிய திட்டம் முறியடிக்கப்பட்ட பின்பு முதல்தடவையாக நாட்டுமக்களுக்கு ஆற்றிய இந்த உரையில் ஒபாமா கூறியிருப்பதாவது:

டெட்ராய்ட் விமானத்தை தகர்க்கும் சதி திட்டத்தை தீவிரவாதிகள் நிறைவேற்றியிருந்தால் அப்பாவிகள் 300 பேர் கொல்லப்பட்டிருப்பார்கள். இந்த சதியில் சம்பந்தப்பட்டவர்களை கண்டறிய முழு அளவிலான விசாரணை நடந்துவருகிறது.

இதற்கு காரணமானவர்கள் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். இந்த தாக்குதல் [^] தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் நமக்கு விடை கிடைக்கவில்லை.

ஆனால், அமெரிக்கா தன் பாதுகாப்பை பலப்படுத்திக்கொள்வது மட்டுமின்றி அதற்கு மேலும் நடவடிக்கை [^] எடுக்கும் என்பதை, அப்பாவி மக்களை, பெண்களை, குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொன்று குவிக்க திட்டமிடும் கூட்டத்திற்கு புரிய வைக்கவேண்டும்.

அவர்கள் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் சரி, ஆஃப்கானிஸ்தானோ பாகிஸ்தானோ, ஏமனோ, சோமாலியாவோ எந்த இடத்தில் இருந்து அமெரிக்காவுக்கு எதிராக சதி திட்டம் தீட்டினாலும் அவர்களை தோற்கடித்து, ஒழித்துக்கட்ட வேண்டும்.

டெட்ராய்ட் சம்பவத்தைப் பொறுத்தவரை இரண்டு விதமான விசாரணைகளை மேற்கொள்ள சொல்லியிருக்கிறேன்.

ஒன்று, தெரிந்த மற்றும் சந்தேகத்துக்கு இடமான தீவிரவாதிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை பட்டியலிட்டு தொடர்ந்து கண்காணிப்பது.
இதன்மூலம் அவர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்திவிட இயலும். டெட்ராய்ட் விமானத்தில் கைது செய்யப்பட்டவன் நிச்சயம் இந்த பட்டியலில் இருந்திருக்க வேண்டும்.

அடுத்தது, விமான நிலையங்களில் சோதனை தொடர்பான தொழில்நுட்பம் மற்றும் நடைமுறை கொள்கைகளை மறு ஆய்வு செய்யவேண்டும். இவ்வளவு ஆபத்தான மருந்துகளை அவனால் எப்படி விமானத்தில் கொண்டுவர முடிந்தது, எதிர்காலத்தில் இதுபோன்ற தவறு நடக்காமல் இருக்க என்ன செய்யவேண்டும் என ஆராய உத்தரவிட்டுள்ளேன் என்றார் ஒபாமா.

Source:thatstamil.in

ஜன 1 முதல் நெல்லை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

நெல்லை: நெல்லை [^] மாவட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த விதிக்கப்பட்டுள்ள தடை [^] வருகிற ஜன 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று கலெக்டர் ஜெயராமன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

நெல்லை அரவிந்த் கண் மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கலெக்டர் ஜெயராமன் பேசுகையில்,

நெல்லை மாவட்டத்தில் ஜன 1ம் தேதி முதல் தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள், மீண்டும் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பை, கப் போன்றவை முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

20 மைக்ரான் வரையிலுள்ள பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது. அதே நேரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பொதுவான தடை இல்லை. நெல்லை மாவட்டத்தில் 5 பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மட்டுமே உள்ளதாக மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த 5 தொழிற்சாலைகளிலும் உற்பத்தி இழப்பு ஏற்படாத வகையில் பேப்பர் கப், பை உற்பத்தி செய்யவும், அதற்காக வங்கி கடன் பெற்று தரவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை நெல்லை மாவட்டத்தில் முற்றிலும் தடை செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இதே போல் தாமிரபரணி ஆற்றிலும் கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்கள் கொட்டப்படுவதை தடுக்க பொதுமக்கள் ஓத்துழைப்பு அவசியம். பிளாஸ்டிக் இல்லாத சுற்று சூழல், மசாற்ற நகரமாக நெல்லையை உருவாக்க பொதுமக்களும், சபதம் எடுத்து கொள்ள வேண்டும் என்றார்.

Source:thatstamil.in

அமெரிக்காவை நோக்கி தற்கொலைப் படையினர் வருகிறார்கள்-பிடிபட்ட நைஜீரியர் பரபரப்புத் தகவல்

வாஷிங்டன்: என்னைப் போல மேலும் பலர் தீவிரவாதத் திட்டத்துடன் அமெரிக்கா [^]வை நோக்கி பல முனைகளிலிருந்து வந்து கொண்டுள்ளனர் என்று அமெரிக்க விமானத்தை தகர்க்க முயன்று பிடிபட்ட நைஜீரிய இளைஞர் உமர் பாருக் அப்துல்முத்தல்லாப் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

எப்.பி.ஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது இந்தத் தகவலை அவர் கூறியுள்ளார். இதையடுத்து அமெரிக்கா முழுவதும் பாதுகாப்பு [^] நடவடிக்கைகள் மேலும் பல படங்கு பலப்படுத்தப்பட்டுள்ளன. உளவு அமைப்புகள் தங்களது கணண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.

எப்.பி.ஐ. அதிகாரிகள் நடத்திய விசாரணையின்போது அப்துல்முத்தல்லாப் கூறுகையில், என்னைப் போல பலர் அமெரிக்காவை நோக்கி வருகின்றனர். குறிப்பாக ஏமனிலிருந்து வருகின்றனர். எப்போது வேண்டுமானாலும் அவர்கள் அமெரிக்காவைத் தாக்கலாம் என்று கூறியுள்ளார் முத்தல்லாப்.

முத்தல்லாப் பிடிபடுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் ஏமனைச் சேர்ந்த அல் கொய்தா தலைவர்கள் ஒரு ஆடியோ டேப்பை வெளியிட்டனர். அதில், கடவுளின் எதிரிகளைத் தாக்க வெடிகுண்டுகள் போய்க் கொண்டுள்ளன என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

23 வயதான முத்தல்லாப் தற்போது கூறுவதைப் பார்க்கும்போது அல் கொய்தாவின் தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் [^] அமெரிக்காவைக் குறி வைத்திருப்பதாக தெரிகிறது.

Source:thatstamil.in

மீண்டும் எமர்ஜென்சி?:கொழும்புவுக்கு ஓடும் பிரணாப்

டெல்லி: மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி நாளை 2 நாள் பயணமாக கொழும்பு செல்கிறார்.

அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை எதிர்த்து பொன்சேகா, போட்டியிடப் போவதாக செய்திகள் [^] வரும் நிலையில்,
தீவிரமான சீன-பாகிஸ்தான் ஆதரவாளரான பொன்சேகா இலங்கை அதிபராவது நல்லதல்ல என்று இந்தியா கருதுகிறது.

இந் நிலையில் பிரணாப் இலங்கை செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பிரணாப்பின் பயணம் ராஜபக்சேவுக்கு உறுதுணையாக இந்தியா இருக்கும் என்பதைத் தெரிவிக்கவே என்கிறார்கள் சர்வதேச பார்வையாளர்கள்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணாவே இதுவரை கொழும்பு போகாத நிலையில், நிதியமைச்சராக இருக்கும் பிரணாப் முகர்ஜி கொழும்புவுக்கு ஓடுவது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

நாளை டெல்லியிலிருந்து பகல் 11.30 மணியளவில் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். 12.30 மணிக்கு விமானம் மூலம் கொழும்புக்கு புறப்பட்டுச் செல்கிறார். சென்னையில் அவர் முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேசலாம் என்றும் எதி்ர்பார்க்கப்படுகிறது.

மேலும் ராணுவப் புரட்சி மூலம் நான் ஆட்சியைக் கவிழ்த்தால் அதை சமாளிக்க படைகளை அனுப்புமாறு ராஜபக்சே இந்தியாவிடம் கேட்டிருந்த விவரத்தையும் தனது ராஜினாமா கடிதத்தில் போட்டு உடைத்துவிட்டார் பொன்சேகா.

இந்த விஷயத்தை மத்திய அரசு மூடி மறைத்தாலும் இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

இந்தப் பின்னணியில் பிரணாப் முகர்ஜியின் கொழும்புப் பயணம் அமைகிறது. தனது பயணத்தின்போது ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் [^] ரோஹித பொகல்லகாமா, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரை பிரணாப் முகர்ஜி சந்திப்பார். பொன்சேகாவையும் அவர் சந்திக்கக் கூடும் என்றும் ஒரு தகவல் கூறுகிறது.

ராஜபக்சே, பொன்சேகா இடையே சமரசம் ஏற்படுத்த பிரணாப் முயலக்கூடும் என்கிறார்கள்.

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவே மீண்டும் வெல்ல வேண்டும் என இந்திய அரசு விரும்புவதாகத் தெரிகிறது. இதற்காகத்தான் சமீபத்தில் ரணில் விக்கிரமசிங்கேவே காங்கிரஸ் [^] கட்சி டெல்லிக்கு அழைத்து ராஜபக்சேவுக்கு எதிராக தீவிரமாக செயல்பட வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாகவும் ஒரு தகவல் உள்ளது.

பொன்சேகா அதிபரானால் அது இந்தியாவுக்கு நல்லதாக இருக்காது, அவர் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படுவார் என இந்தியாவுக்கு அச்சம் உள்ளது. இதனால்தான் பொன்சேகாவின் எழுச்சியை இந்தியா விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

இலங்கைக் கடற்படையுடன் சேர்ந்து சீன வீரர்களும் தற்போது கச்சத்தீவு பகுதியில் நடமாடி வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்தும் பிரணாப் முகர்ஜி [^] இலங்கையுடன் பேசுவார் எனத் தெரிகிறது. அப்படியே தமிழர் மறு குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் அவர் பேசக் கூடும் என்றும் தெரிகிறது. ஆனால், இதை அவர் முக்கியமாகப் பேசப் போவதில்லை.

காரணம், ராஜபக்சே-பொன்சேகா மோதல் வெடிக்காத வரை அவர் இலங்கை செல்லும் திட்டத்திலேயே இல்லை. உண்மையிலேயே தமிழர் மறுகுடியமர்த்தல் விஷயத்தில் ஆர்வம் இருந்திருந்தால் எப்போதோ இலங்கைக்கு போயிருக்க வேண்டும்.

மீண்டும் எமர்ஜென்சி?:

இருக்கும் சிக்கல் போதாதென்று இலங்கை பிரதமர் ரத்னசிரி விக்ரமநாயகே, நாட்டில் மறுபடியும் அவசர கால சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று பேசி பரபரப்பை அதிகப்படுத்தியுள்ளார்.

அவர் பேசுகையில், தீவிரவாதம் அழிக்கப்பட்டு விட்டது. இருந்தாலும் தீவிரவாதத்தின் நிழல் நம்மை துரத்திக் கொண்டு வருகிறது. எனவே மக்கள் பாதுகாப்பைக் கருதி மறுபடியும் நாட்டில் அவசர நிலையைக் கொண்டு வர வேண்டியது அவசியமாகும்.

அவசர கால சட்டத்தின் அவசியம் குறித்து சிலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆனால் தீவிரவாதத்தின் நிழலையும் முழுமையாக ஒழிக்க நமக்கு இந்த சட்டம் தேவையானதாக உள்ளது.

source:thatstamil.in

தேச பக்தி

வந்தே மாதரம்!

இனிய நீர்ப் பெருக்கினை! இன்கனி வளத்தினை!
தனிநறு மலயத் தண்காற் சிறப்பினை!
பைந்நிறப் பழனம் பரவிய வடிவினை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை!
மலர்மணிப் பூத்திகழ் மரம்பல செறிந்தனை!
குறுநகை இன்சொலார் குலவிய மாண்பினை!
நல்குவை இன்பம் வரம்பல நல்குவை!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

- வந்தே மாதரம்: மகாகவி பாரதியாரின் மொழியாக்கம் (முழுவதும் இங்கே).

உலகின் ஒளியாக, ஞானமும், செல்வ வளங்களும் நீதியும் நிறைந்தவளாக பாரத மாதாவை சித்தரிக்கும் ஓவியம். இதனை வரைந்தவர் மகாகவி தாகூரின் சகோதரரும் பெரும் கலைஞருமான அவனீந்திரநாதத் தாகூர்.

வந்தே மாதரத்திற்கு எதிரான முஸ்லிம் உலமா நிறுவனம்

செப்டம்பர் 2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டின்போது, தியோபாண்டைச் சேர்ந்த ”தருல் உலூம்” (Darul Uloom at Deoband) எனும் இஸ்லாமிய மத நிறுவனம், “தேசியப் பாடலான வந்தே மாதரம் இஸ்லாத்திற்கு எதிரானது. அதை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று ஒரு கட்டளை (Fatwa) இட்டிருந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (03-11-09) அன்று நாடு முழுவதிலிருந்தும் ஆயிரக்கணக்கான உலமாக்களைக் கூட்டிய “ஜமாத் உலமா-இ-ஹிந்த்” (Jamiat Ulema-e-Hind) என்கிற அமைப்பு, “தருல் உலூம் இட்ட வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளை சரியானது. இஸ்லாத்தின் மதக் கொள்கைகளுக்கு எதிராக இருப்பதால் வந்தே மாதரம் பாடலை முஸ்லிம்கள் பாடக் கூடாது” என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அந்த அமைப்பின் அழைப்பின் பேரில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் திரு ப.சிதம்பரம் அவர்கள், அயோத்தியில் ஸ்ரீ ராமபிரானின் ஜன்மஸ்தானத்தின் மீது இருந்த பிரச்சனைக்குறிய கட்டிடம் பதினேழு வருடங்களுக்கு முன்னால் இடிக்கப் பட்டடதைக் கண்டித்துப் பேசினார். அந்தப் பிரச்சனைக்குறிய கட்டிடம் சும்மா கிடந்திருந்தாலும், அங்கே தொழுகைகள் எதுவும் நடக்காதிருந்தாலும், போலி மதச்சார்பின்மை பேசும் பொய்யர்கள் அதை “மசூதி“ என்றே கூறிவந்தனர். அதே பொய்யை மீண்டும் கூறிய சிதமபரம், அக்கட்டிடம் இடிக்கப் பட்டதை, “தீவிர துவேஷத்துடன் கூடிய மத வெறிச் செயல்“ என்று வர்ணித்துள்ளார்.

chidambaramஃபிப்ரவரி 2008-ல் பயங்கரவாதத்திற்கு எதிராக கட்டளை இட்ட இதே ‘தருல் உலூம்’ அமைப்பைப் பாராட்டிப் பேசிய சிதம்பரம் அதற்குப் பின்னால் நடந்த ஜெய்பூர், பெங்களூரு, அகமதாபாத், மும்பை ஆகிய இடங்களின் மீதான பயங்கரவாதத் தாக்குதல்களைக் கண்டிக்க (வேண்டுமென்றே) தவறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிரான தருல் உலூம் அமைப்பின் கட்டளை “தகியா“ (Taqiya) என்கிற ”இஸ்லாத்திற்காக நடத்தப்படும் நாடகம்” (Telling lies for the sake of Islam) என்பதை, அக்கட்டளைக்குப் பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளான “ஜிகாத்“ போராட்டங்கள் நிரூபித்தாலும், அரசாங்கத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவ்வமைப்பின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் கோரியுள்ளார் சிதம்பரம். ஜமாத்-இ-ஹிந்த் அமைப்பு தன் பங்கிற்கு, தற்கொலைப் படையினர் அப்பாவி மக்களைக் குண்டு வைத்துக் கொல்வதை “மன்னிக்க முடியாத பாவச் செயல்“ என்று வன்மையாகக் கண்டித்தாலும், “ஜிகாத்“ என்பதை “உபயோகமுள்ள செயல்பாடு“ (constructive phenomenon) என்று வர்ணிக்கத் தயங்கவுமில்லை, தவறவுமில்லை. அதே சமயத்தில் “ஜிகாத்“ எந்த விதத்தில் உபயோகமுள்ள செயல்பாடாக இருக்கின்றது என்பதை அவ்வமைப்பு விளக்கவுமில்லை.

பல வருடங்களாகத் தொடர்ந்து ‘ஜிகாத்’ செயல்பாடுகளால் அப்பாவி மக்கள் இறக்கமின்றி ஆயிரக்கணக்கில் கொல்லப் படுவதையும், ‘தகியா’ செயல் பாடுகளால் மக்கள் ஏமாற்றப் படுவதையும், இந்த தேசம் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், வரும் நாட்களில் பயங்கரவாதத் தாக்குதல்கள் நடக்காமல் தடுக்கப்படுவது, பொதுவாக அரசாங்கத்தின் பொறுப்பாகவும், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கடமையாகவும் இருக்கின்றது. இந்தக் கடமையை உணர்ந்து சிதம்பரம் செயல்படுவார் என்று மக்கள் நம்புகிறார்கள். எனவே தற்போது வந்தே மாதரத்திற்கு எதிரான கட்டளையை உறுதி செய்துள்ள செயல், இந்தியாவை ”தருல் இஸ்லாமாக” (இஸ்லாமிய தேசம் – Darul-Islam) மாற்றுவதற்கான ‘ஜிகாத்’ மற்றும் ‘தகியா’ ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் என்பதால், அத்தீர்மானத்தை நேர்மையான முறையில் விவாதத்திற்கு உள்ளாக்க வேண்டும். அதுவே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தேசியப் பாடலான வந்தே மதரத்திற்கு எதிரான தீர்மானம் ஜமாத் சபையில் தன் முன்னே நிறைவேற்றப்படவில்லை என்று சிதம்பரம் கூறினாலும், அத்தீர்மானத்தைப் பற்றித் தெரிந்த பின்னர் அவரோ, அரசாங்கமோ, அவரின் காங்கிரஸ் கட்சியோ கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சனைக்குறிய கட்டிடத்தை ‘மசூதி‘ என்று பொய் சொல்வதற்கும், அது இடிக்கப்பட்டதை ‘மதவெறிச் செயல்‘ என்று வர்ணிப்பதற்கும் இருந்த தைரியம், தேசியப் பாடல் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைக் கண்டிப்பதற்கு அவரிடம் இல்லை.

1930களிலிருந்து வந்தே மாதரம் பாடலை தேசிய நீரோட்டத்திலிருந்து தள்ளி வைக்க பயன்படுத்தப்பட்ட நேரு குடும்பச் சொத்தாக மாறிய காங்கிரஸ் கட்சியின் “போலி மதச்சார்பின்மை“ மற்றும் “சிறுபான்மையினருக்கு காவடி தூக்கல்“ ஆகிய கொள்கைகளின் வெளிப்பாடு, சிதம்பரம் அவர்களின் பேச்சிலும், செயல்பாடுகளிலும் இருந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

indian-national-flagவந்தே மாதரம் பாடலின் வரலாறு, முக்கியத்துவம் மற்றும் புனிதத்துவம்

நவம்பர் 7, 1876: - ஸ்ரீ பங்கிம் சந்திர சாட்டர்ஜீ (1838-1894) வங்காளத்தில் கந்தல்படா என்கிற கிராமத்தில் ’வந்தே மாதரம்’ பாடலை எழுதி ராகம் அமைத்து நம் தாய்த்திரு நாட்டிற்கு அர்ப்பணம் செய்தார்கள். இந்தப் பாடல் அவருடைய ‘ஆனந்தமத்’ (1882) என்கிற நாவலிலும் இடம் பெற்றது.

1896: - கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டில் ரபிந்த்ரநாத் தாகூர் வந்தே மாதரம் பாடலைப் பாடினார். குழுவினராக இப்பாடலைப் பாடிய முதல் அரசியல் நிகழ்சியாகும் அது. தாகூர் அப்பாடலுக்கு இசையும் அமைத்தார்.

1901: - ஸ்ரீ தக்கின சரண் சென் அவர்களின் வழிகாட்டுதல்படி இந்திய தேசிய காங்கிரஸ் வந்தே மாதரம் பாடலைப் பாடுவதற்குப் பயிற்சி மேற்கொண்டது. கல்கத்தாவில் நடந்த இன்னொரு காங்கிரஸ் மாநாட்டில் அவர் அதை மீண்டும் பாடினார்.

1905: - கர்சன் பிரபுவின் ’வங்காளப் பிரிவினை’ (16 அக்டோபர் 1905) மற்றும் ’சுதேசி இயக்கத்தின் துவக்கம்’ (7 ஆகஸ்ட் 1905) ஆகியவற்றைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசாங்கத்தின் சர்வாதிகார ஆட்சியிலிருந்து நாட்டை மீட்கும் தேச விடுதலை முழக்கமாக ஆகியது ’வந்தே மாதரம்’ பாடல்.
ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி, பனாரஸ் காங்கிரஸ் மாநாட்டில், ரபிந்த்ரநாத் தாகூரின் மருமகள் ஸ்ரீமதி சரளா தேவி சௌதரணி வந்தே மாதரம் பாடலைப் பாடினார்.
மாதங்கனி ஹஸ்ரா என்னும் காங்கிரஸ் கட்சியின் தொண்டர் ஒருவரை கிரௌன் போலீஸார் சுட்டுக் கொன்ற போது, அவர் வந்தே மாதரம் என்று முழங்கிய படியே உயிர் நீத்தார்.

1906: - ’பஞ்சாப சிங்கம்’ என்று போற்றப்பட்ட லாலா லஜபதி ராய் ‘வந்தே மாதரம்’ என்கிற சஞ்சிகையை லாஹூரில் ஆரம்பித்தார்.
அதே ஆண்டு மார்ச் மாதம் “பரிசல் பரிஷத்” துவக்கப்பட்டு வங்காள அளவிலான மாநாடு பரிசல் என்ற இடத்தில் நடத்தப்பட்டது. அம்மாநாட்டின் அங்கத்தினர்கள் அனைவரும் ஆங்கில அரசாங்கத்தின் தடையை மீறி வந்தே மாதரம் முழங்கியபடியே ஊர்வலம் சென்றனர். அவர்கள் போலீசாரின் தடியடித் தாக்குதலில் இரத்தம் சிந்த மாநாடு பாதியிலே நின்று போனது.
ஆகஸ்டு 7, 1906 அன்று ஸ்ரீ அரவிந்தர் (1872-1950) ’வந்தே மாதரம்’ தினசரியைத் துவக்கினார். பின்னர் அது இந்தியப் பத்திரிகைத் துறை வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்றது.

1907: - ஜெர்மனி நாட்டின் ஸ்டட்கார்ட் என்னுமிடத்தில் நடந்த இரண்டாவது சர்வதேச காங்கிரஸ் மாநாட்டில், மேடம் பிகாய்ஜி காமா (1861-1936) மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார். அவரும் அவருடைய நண்பர்களும் சேர்ந்து 1905-ல் வடிவமைத்த அம்மூவர்ணக் கொடியானது, மேலே பச்சையும், இடையே காவியும், கீழே சிவப்பும் கொண்டு, நடுவில் ’வந்தே மாதரம்’ என்று எழுதப்பட்டதாகும்.

ஆகஸ்டு 11, 1908: - ஆங்கிலேய அரசால் தூக்கிலிடப்பட்டபோது பத்தொன்பதே வயதான இளம் விடுதலை வீரர் குதிராம் போஸ் வந்தே மாதரம் பாடலைத் தன் உதடுகளில் தாங்கி உயிர் துறந்தார்.

ஆகஸ்டு 17, 1909: - லண்டன் பெண்டன்வில்லே சிறைச் சாலையில் இருபத்தியாறே வயதான விடுதலை வீரர் மதன்லால் திங்க்ரா (1883-1909) தூக்கிலிடப்பட்டார். வந்தே மாதரம் பாடி உயிர் நீத்த அவர் வரலாற்றில் அழியா இடம் பெற்றார்.

1915: - ஒவ்வொரு மாநாட்டிலும் வந்தே மாதரம் பாடித் துவக்குவதை ஒரு புனித பாரம்பரியமாகக் கைக்கொண்டது இந்திய தேசிய காங்கிரஸ்.

1927: - வந்தே மாதரம் பாடலின் அற்புதத்தை அடிக்கடி போற்றி வந்த காந்திஜி, “இப்பாடல் ஒருவரின் கண்முன்னே முழுமையான பிரிக்கமுடியாத பாரதத்தைக் கொண்டு வந்து நிறுத்துகிறது” என்றார்.

1943-1945: - தன்னுடைய இந்திய தேசிய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பாடலாக வந்தே மாதரத்தை அங்கீகரித்தார் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ். அவருடைய சிங்கப்பூர் வானொலி நிலையத்திலிருந்து இப்பாடல் தொடர்ந்து ஒலிபரப்பப்பட்டு வந்தது.

எப்போது வந்தே மாதரம் நம் தேசத்தின் விடுதலை முழக்கமாக ஆனதோ, அப்போதிலிருந்து நூற்றுக்கணக்கான தேசத் தலைவர்களும், லட்சக்கணக்கான சுதந்திரப் போராட்டத் தொண்டர்களும் வந்தே மாதரம் என்கிற மந்திரத்தைத் தங்களின் கடைசி வார்த்தைகளாகச் சொல்லியபடியே தேச விடுதலைப் போராட்டத்தில் தங்களின் உயிரைத் தியாகம் செய்துள்ளனர்.

துரதிர்ஷ்டவசமாக தேசியத்தை முன்வைத்த தலைவர்களும் அவர்களின் தொண்டர்களும் பின்தள்ளப்பட்டு, சிறுபான்மை சமுதாயத்திற்குக் காவடி தூக்கும் ‘மதச்சார்பற்ற’ சக்திகளின் கைகள் இந்திய தேசிய காங்கிரஸில் ஓங்கிய பின்னர், சிறுபான்மை சமுதாயத்தினரின் ஆதரவை வெற்றி கொள்ளும் பாதையில் வந்தே மாதரம் ஒரு ’தடங்கல்‘ போன்று அவர்களால் பார்க்கப் பட்டது. அந்த நோக்கத்தின் விளைவாக, விடுதலை இயக்கத்தின் ஆன்மாவான வந்தே மாதரத்திற்குப் பதிலாக “ஜன கன மன” இந்திய தேசிய கீதமாக அங்கீகரிக்கப்பட்டது. மேலும் இந்திய தேசிய காங்கிரஸ் முகம்மது இக்பாலின் “சாரே ஜஹான் ஸே அச்சா” வையும், முஸ்லிம் சமுதாயத்தினரைத் திருப்தி படுத்துவதற்காக ஒரு இணைப்பு தேசிய கீதமாகக் கொண்டது.

அதிர்ஷ்டவசமாக, ‘ஜன கன மன’ என்னும் தேசிய கீதத்திற்கு சமமாக வந்தே மாதரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதை தேசியப் பாடலாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற எண்ணம் நம் அரசியல் நிர்ணய சபைக்கு வந்தது. அதைத் தொடர்ந்து, 24 ஜனவரி 1950 அன்று அரசியல் நிர்ணய சபையை துவக்கி வைத்துப் பேசிய நம் முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரஸாத் அவர்கள், “‘ஜன கன மன’ என்று இயற்றப்பட்டு இசையமைக்கப் பட்ட பாடலை, அவ்வப்பொழுது அரசு ஏற்படுத்தும் மாற்றங்களுக்கு இணங்க, தேசிய கீதமாவும், ந்ம்முடைய விடுதலைப் போராட்ட இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வந்தே மாதரம் பாடலை தேசிய கீதத்திற்கு இணையான முக்கியத்துவத்தை கொடுத்து தேசியப் பாடலாக இச்சபை அங்கீகரிக்கிறது. இது அனைத்து அங்கத்தினர்களுக்கும் திருப்தி அளிப்பதாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று உறுதியிட்டு கூறினார். அரசியல் நிர்ணய சபையில் 28 முஸ்லிம் அங்கத்தினர்களும் இருந்தார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

- கான்பூர் பிரகாஷ் புஸ்தகாலயாவின் திரு.சிவ நாராயண மிஷ்ரா வைத்யா அவர்களின் பதிப்பை மூலமாகக்கொண்டு, சென்னையைச் சேர்ந்த திரு தங்க காமராஜ் அவர்கள் வடிவமைத்தபடி, திருமதி.பத்மா சுந்தரம் அவர்களின் ’என்னபடம் எஜுகேஷனல் பப்லிஷர்ஸ்’ (Ennappadam Educational Publishers, Chennai-85) மறுபதிப்பு செய்துள்ள “வந்தேமாதரம் ஆல்பம்” (Bandemataram Album) என்கிற அற்புதமான புத்தகத்திலிருந்து. இப்புத்தகத்தில் வந்தே மாதரம் பாடலில் உள்ள சில அழகான வார்த்தைகளை விளக்கி திரு கே.தேஜேந்த்ரகுமார் மித்ரா அவர்கள் வரைந்த அருமையான ஓவியங்களும் உள்ளன.

நேருவின் ‘மதச்சார்பின்மை’ கொள்கையின் பாதிப்பு

இந்திய தேசிய காங்கிரஸ் நேரு குடும்பத்தின் ராஜ்ஜியமாக ஆனதால், ’வந்தே மாதரம்’ மெதுவாகப் புறந்தள்ளப்பட்டு ‘சாரே ஜஹான் ஸே அச்சா’ முக்கியத்துவம் அடைந்தது. நேருவிற்குப் பிறகு வரிசையாக அவரின் குடும்பத்தவரின் கீழ் நடந்த ஆட்சிகளில், நேரு முதல் இந்திரா, ராஜிவ் வழியாக சோனியா வரை, சிறுபான்மை சமுதாயத்திற்கு காவடி தூக்கி அதிக சலுகைகள் வழங்கியதால், தேச ஒற்றுமைக்கும், தேசியத்திற்கும் எதிராகக் கட்டளைகள் இடும் அளவிற்குத் தைரியம் அடைந்தனர் முஸ்லிம் மத குருமார்கள். அதற்குச் சரி சமமாக அவர்களை எதிர்க்கத் திராணி இல்லாமல் அமைதி காக்கும் அளவிற்கு வளர்ந்தது காங்கிரஸ் கட்சியின் கோழைத்தனம்.

bharat_mata_tshirtசுதந்திரம் பெற்ற பின் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நேரு குடும்பத்தின் ஆக்கிரமிப்பில் நம் தேசம் கட்டுண்டு கிடந்தமையால் “தேசியம்” (Nationalism) குறைந்து “மதச்சார்பின்மை” (Secularism) வளர்ந்து, சிறுபான்மையினருக்கு தேவைக்கு அதிகமாகச் சலுகைகள் அளிக்கப்பட்டு பெரும்பான்மை சமுதாயம் இரண்டாம் தரக் குடிமக்களாக அவர்களின் சொந்த மண்ணிலேயே நடத்தப்பட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் வழித்தடங்களைப் பின்பற்றி மற்ற கட்சிகளும் சிறுபான்மையினருக்குக் காவடி தூக்கி, சாமரம் வீசி, தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிராக, மதவெறி, ஜாதிவெறி, பிரிவினைவாதம், மொழி வெறி, ஆகிய கொள்கைகளை கையாண்டு சமூகத்தைக் கூறுகளாகப் பிளந்து விட்டனர்.

நாளடைவில் மேற்கண்டவாறு பல வகைகளில் பிரிந்து போன சமூகம் ”வேற்றுமையில் ஒற்றுமை” (Unity in Diversity) என்கிற உன்னத மந்திரத்தை மறந்து போனது. ஆங்கிலேய அரசு அறிமுகம் செய்த மெக்காலே கல்வித் திட்டத்தின் தொடர்ச்சியும், தேசப்பற்று, தேசியவாதம் ஆகியவை வளர்ச்சியடையாமல் இருக்கவும் மேலும் குறைந்து போகவும் காரணமாக இருக்கிறது. வந்தே மாதரம் புறந்தள்ளப்பட்டதோடு மட்டுமல்லாமல், ஜன கன மன - வும் தன்னுடைய தேசிய கீதம் என்னும் முக்கியத்துவத்தை இழக்க காரணமாக பல மாநிலங்கள் தங்களின் சொந்த மாநில கீதங்களைக் கொண்டாட ஆரம்பித்தன. உதாரணமாக, தமிழகத்தில் மாநில கீதமாக “தமிழ்தாய் வாழ்த்து” அதிக முக்கியத்துவம் பெற்றதால் தேசிய கீதம் அரசு விழாக்களில் கூட இசைக்கப் படுவது நின்று போனது. நம் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான மந்திரிகளுக்கும், எம்,எல்.ஏக்களுக்கும், அதிகாரிகளுக்கும் தேசிய கீதத்தை முழுமையாகப் பாடத் தெரியாது என்பதில் ஐயமில்லை. இதே போன்று தான் மற்ற பல மாநிலங்களிலும்.

மாநில கீதங்கள் மாநில அரசு விழாக்களில் இசைக்கப்படுவதில் தவறில்லை. ஆனால் அவை தேசிய கீதத்தை மறைத்திருக்கும் கிரகணங்களாக மாறியது தான் கொடுமையிலும் கொடுமை.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியும் தேசப்பற்றும்

lalu-insults-national-anthemசில வருடங்களுக்கு முன்னால் பிஹார் மாநிலத்தில் ஒரு அரசு விழாவில் தேசிய கீதத்தை அவமானப் படுத்திய லாலு பிரசாத் யாதவ் சென்ற ஐ.மு.கூ. அரசில் ரயில் போக்குவரத்துத்துறை மந்திரியாக இருந்துள்ளார். மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் அர்ஜுன் சிங் அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியப் பாட நூல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் வெளிக்கொணர்ந்த பள்ளிப் பாடப் புத்தகங்களில் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸரை மனநிலை சரியில்லாதவர் என்றும் பால கங்காதிரத் திலகர் மற்றும் அரவிந்தர் ஆகியோரைத் தீவிரவாதிகள் என்றும் கூறப்பட்டிருந்தது.

2006-ல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றண்டு விழா கேவலமான முறையில் கொண்டாடப்பட்டது. தேசியப் பாடல் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைக் கட்டாயமாக நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள் பாட வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பிய அர்ஜுன் சிங், முஸ்லிம் மதகுருமார்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் அச்சுற்றறிக்கையைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காங்கிரஸ் கட்சி ஏனொ தானோ என்று கொண்டாடிய வந்தே மாதரம் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மன்மோகன் சிங்கும், சோனியாவும் பங்கு பெறாமல் வந்தே மாதரத்தை அவமதித்தனர். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப்போல, அவ்விழாவைத் தொடர்ந்து நடந்த காங்கிரஸ் கட்சியின் 122-வது தின விழாவில், சோனியா மேடைக்கு நடந்து வரும் வரை, ஏதோ வந்தே மாதரம் அவரைப் போற்றித் தான் பாடப்பட்டுள்ளதைப் போன்று, நேரு குடும்பத்தின் தொண்டர்கள் (காங்கிரச் கட்சியினர்) தங்கள் தன்மானமற்ற அடிமைத்தனத்தை அறுவறுக்கத்தக்க விதத்தில் காட்சிப் பொருளாக ஆக்கும் விதமாக, வந்தே மாதரம் பாடலைப் பாடினர்.

2005-ல் உப்பு சத்தியாகிரகத்தின் ஆண்டு விழாவை அனுசரிப்பதாகக் கூறிக்கொண்டு, சோனியாவும் அவரின் பரிவாரத்தினரும் காந்திஜியின் தண்டி யாத்திரையை கொச்சைப் படுத்தினர். 2006-ல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரகடம் என்ற ஊரில் நடந்த அரசு விழாவில் சோனியா, மன்மோகன் மற்றும் காங்கிரஸ் பரிவாரத்தினர் தேசிய கீதம் இசைக்கும் முன்பே விழா மேடையை விட்டு வெளியேறினர்.

’தேசிய வளர்ச்சி மையம்’ அனுமதியளித்த 11-ஆவது ஐந்தாண்டு திட்டத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவை எடுத்தது ஐ.மு.கூ அரசு. அந்தத் திட்ட அறிக்கை “மதரஸாகளும் / மக்தப்களும்” (Madarasas / Maktabs) என்ற தலைப்பின் கீழ், “சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற தேசிய விழாக்களைக் கொண்டாடுவதற்கு மதரஸாக்களுக்குச் ’சிறப்பு நிதி’ அளிக்கப்படும்” என்று அறிவித்திருந்தது. வந்தே மாதரம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் யாரும் அந்தப் பாடலைப் பாடக்கூடாது என்று தருல் உலூம் கட்டளையிட்ட பிறகு காங்கிரஸ் அரசு அந்த அறிவிப்பை வெளியிட்டது தான் முரணானது. மதரஸா போன்ற மத நிறுவனங்கள், மதச் சுதந்திரம், சிறுபான்மையர் உரிமை, போன்ற சலுகைகளை அனுபவிக்கும் அதே நேரத்தில் தேசிய விழாக்களைப் புறக்கணிப்பது, தேசியக் கொடியை ஏற்றாமல் இருப்பது, வந்தே மாதரம் பாட மறுப்பது போன்ற செயல்களில் இறங்குவது கண்டிக்கத் தக்கது. மேலும் இந்த மாதிரியான தேசிய நீரோட்டத்தில் சேராத மதவெறியைத் தூண்டும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பின்நாட்களில் தீவிரவாதிகளாக மாறுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக, ஐ.மு.கூ அரசாங்கம் இந்த மாதிரியான நிறுவனங்களை இழுத்து மூடாமல், அல்லது அந்த நிறுவனங்களை கையகப் படுத்திக் கொண்டு அவற்றை தேசிய நீரோட்டத்தில் சேர்க்காமல், அதற்குப் பதிலாக, அரசியல் சட்டத்தின் படி இன்றியமையாத கடமையான தேசிய விழாக்களைக் கொண்டாட அவைகளுக்குச் சிறப்பு நிதி ஒதுக்கியளிப்பது மிகவும் கண்டிக்கத் தக்கது. தேசியக் கொடியை ஏற்றுவதையும், தேசிய விழாக்களைக் கொண்டாடுவதையும், வந்தே மாதரம் பாடுவதையும் ஏன் அரசாங்கம் கட்டாயமாக்கக் கூடாது? எதற்காக அதற்கு நிதியும் வழங்கி பின்னர் அந்நிறுவனங்களிடம் பிச்சையும் எடுக்க வேண்டும்? தேசத்திற்குச் சிறிதும் பயன்படாத அந்நிறுவனங்களை இழுத்து மூட வேண்டியது தானே?

இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, ஜமாத்-உலேமா-இ-ஹிந்த் அமைப்பின் வந்தே மாதரத்திற்கு எதிரான தீர்மானத்தைப் பற்றிக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு கண்டுகொள்ளாததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. பா.ஜ.க-வைத் தவிர வேறு எந்த அரசியல் கட்சியும் அதற்குக் கண்டனம் தெரிவிக்காமல் இருந்ததிலும் வியப்பில்லை. இந்த நாள் வரை நம் நாட்டில் உள்ள அனைத்து தேசிய இயக்கங்களும் வந்தே மாதரம் பாடலை ஆராதித்தே வந்திருக்கின்றன. வந்தே மாதரம் பாடல் இன்னும் இந்த தேசத்தில் பற்றுடனும், பக்தியுடனும் போற்றப் படுகிறது என்றால் அதற்கு தேசிய இயக்கங்களே காரணம்.

ஆர்.எஸ்.எஸ். vs. ஐ.மு.கூ

dr_hedgevar1ராஷ்ட்ரிய ஸ்வயம் ஸேவக் அமைப்பைத் தொடங்கிய டாக்டர் கேஷவ் பல்ராம் ஹெட்கேவார் தன்னுடைய சிறுவயதில் நாக்பூரில் வந்தே மாதரம் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பள்ளியிலிருந்து நீக்கப் பட்டார். பின்நாட்களில் அவரே 1925-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைத் தொடங்க, அவ்வியக்கம் பாரத தேசம் முழுவதும் பரவி தேசப் பற்றையும், தேசியக் கொள்கைகளையும் மக்கள் மத்தியில் பரப்பியது.

2004-ல் மத்தியில் ஐ.மு.கூ அரசு ஆட்சியமைத்த பிறகு, மத்தியப் பிரதேச மாநிலத்தில் பா.ஜ.க அரசு, அரசுப் பணியாளர்கள் ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளிலும், பயிற்சி வகுப்புகளிலும் கலந்து கொள்ளலாம் என்று அரசாணைப் பிறப்பித்தது. அவ்வரசாணையை எதிர்த்து சோனியா, “ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மதவெறியையும், மதவேறுபாட்டையும் வளர்க்கிறது; மத்தியப் பிரதேச மாநில அரசின் ஆணை, அரசியல் சாஸனத்தின் கொள்கைகளுக்கு எதிராக அரசு இயந்திரங்கள் பயன்படுத்தப் படுவது போல இருப்பது கவலை அளிக்கிறது” என்று அப்போதைய ஜனாதிபதி மண்புமிகு அப்துல் கலாம் அவர்களுக்குக் கடிதம் எழுதினார். ஆனால் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைப் பற்றி ஜனாதிபதிக்கும் மற்றும் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியுமாதலால், சோனியாவின் “தேசப் பற்று”ம் அரசியல் சாஸனத்தின் மீது அவர்கொண்டிருந்த “அக்கறை”யும் அரசியல் அரங்கத்தில் எந்தவிதமான சலனத்தையும் ஏற்படுத்தவில்லை.

மற்ற மதத்தவர்களும் வந்தே மாதரம் பாடுகிறார்கள்

பல முஸ்லிம் பிரபலங்கள் வந்தே மாதரம் பாடலுக்கு முழு ஆதரவைத் தந்துள்ளார்கள் என்பதும் உண்மை தான். ஆரிஃப் முகம்மது கான், முக்தார் அப்பாஸ் நக்வி, நஜ்மா ஹெப்துல்லா போன்ற அரசியல்வாதிகள் வந்தே மாதரம் பாடுபவர்களே. ஆரிஃப் முகம்மது கான் அவர்கள் அப்பாடலை உருது மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். செப்டம்பர் 6, 2006-ல் அகில இந்திய சன்னி உலேமா வாரியம், முஸ்லிம்கள் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு பத்திகளைப் ”பாடலாம்” என்று கட்டளை இட்டுள்ளது! அந்த மன்றத்தின் தலைவர் மௌலானா முஃப்தி சையது ஷா பத்ருத்தின் காத்ரி அல்ஜீலானி அவர்கள், “நம் அன்னையின் காலடியில் வணங்கும்போது அது மரியாதை தானே ஒழிய தொழுகை அல்ல” என்று விளக்கம் அளித்துள்ளார். ஷியா சான்றோரும் அகில இந்திய முஸ்லிம் தனிச் சட்ட வாரியத்தின் உதவித் தலைவருமான மௌலானா கல்பே சாதிக் அவர்கள் செப்டம்பர் 5, 2006 அன்று முஸ்லிம் சான்றோர்கள் “வந்தே” என்கிற வார்த்தையை ஆராய வேண்டும் என்று சொல்லி, ”அது மரியாதை செய்வதைக் குறிக்கிறதா அல்லது தொழுவதைக் குறிக்கிறதா” என்று கேட்டுள்ளார். (பார்க்க: விக்கிபீடியா)

… தேசியக் கொடியில் புத்த மதத்தின் சக்கரம் இருக்கிறது. தேசியச் சின்னத்தில், சிங்கம், எருது, குதிரை – அது போக “சத்யமேவ ஜயதே” என்ற வேத வாக்கியம் வேறு. முதலில் சின்னங்களைப் போற்றுவது என்பதே இஸ்லாமுக்கு எதிரானது – அதிலும் இதெல்லாம் உருவ வழிபாட்டுக் காஃபிர்களின் சின்னங்கள். எனவே, தேசிய சின்னங்களைப் போற்றுவது இஸ்லாமுக்கு எதிரானது!..

… வந்தே மாதரத்திற்குக் கூறியது அப்படியே தமிழ்த்தாய் வாழ்த்திற்கும் பொருந்தும். “நீராரும் கடலுடுத்த நில மடந்தை” (“ஸமுத்ர வஸனே தேவி” என்ற பூமி ஸ்துதியின் பொருளும் இதே) என்று பூமித்தாயைத் தானே அதில் போற்றுகிறோம்? “தரித்த நறும் திலகமுமே” - திலகம் வைத்துக் கொள்வது இஸ்லாமிற்கு எதிரானதில்லையா? “அத்திலக வாசனை போல்” என்று தமிழ்த்தாயை இந்தப் பாடல் போற்றுகிறதே? “வந்தே” என்ற சொல்லுக்கு ஈடானது “வாழ்த்துதுமே” என்ற தமிழ்ச் சொல். என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தமிழ் நாட்டு இமாம்களும், மௌல்விகளும்? உடனடியாக, முஸ்லீம்கள் யாரும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடக் கூடாது என்று ஃபத்வா விட வேண்டாமா? …

பாரதம் போன்ற ஷரியத் சட்டம் நடைமுறையில் இல்லாத ஒரு சுதந்திர நாட்டில், இஸ்லாமிஸ்டுகளை உண்மையில் கோபப் படுத்துவது நம் கருத்துக்களோ, நடைமுறைகளோ அல்ல. அந்தக் கருத்துக்களையும், நடைமுறைகளையும் அடக்கி, ஒடுக்கி, அழிக்கும் அதிகாரம் தம்மிடம் இல்லை என்பது தான்! ஏனென்றால், இஸ்லாமிஸ்டுகளின் உண்மையான நோக்கம் ஷரியத் சட்டப்படி இயங்கும் ஒரு அரசை உருவாக்கி அதில் அதிகாரம் செலுத்துவது. அப்படி ஆனவுடன் எதைத் தடை செய்யலாம், எதை அனுமதிக்கலாம் என்பதை அவர்களே முடிவு செய்யும் அதிகாரம் வரும், அப்போது மட்டுமே அவர்கள் திருப்தியடைவார்கள்.

The real gripe Jihadi Islamists have in non-Muslim countries is about power, not any matters of religious belief or custom.

“ஒரு பாடலைப் பாடினால் தான் தேசபக்தனா – இல்லை என்றால் கிடையாதா” என்று வெற்று வாதம் செய்யும் அறிவு ஜீவிகளும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பாடலைப் பாட மறுப்பதற்காகக் கூறும் காரணம் பகுத்தறிவின் (rationality) பால் பட்டதல்ல. மாறாக குருட்டு நம்பிக்கை (irrationality)யின் உச்சக் கட்டமான மதவெறி மற்றும் அதிகார வெறி சார்ந்தது.

- ஜடாயு எழுதிய ”வந்தே மாதரம் பாடலின் அமர வரலாறும், பாடல் மறுப்பின் பின் நிற்கும் தேச விரோத விஷ விருட்சங்களும்” என்ற கட்டுரையிலிருந்து..

நம் நாட்டின் ஐம்பதாவது சுதந்திர தின விழாவையொட்டி 1997-ஆம் ஆண்டு பரத் பாலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரபல இசை அமைப்பாளர் எ.ஆர்.ரஹ்மான் அவர்கள் வந்தே மாதரம் பாடலுக்கு அற்புதமாக இசையமைத்து வெளியிட்டார். அதில் அவர் பாடவும் செய்துள்ளார். மேலும் அதை உலகம் முழுவதும் பரவச்செய்தார். அதே போல் வந்தே மாதரம் பாடியதன் நூற்றாண்டு விழாவின் போது பல பள்ளிகளில் உள்ள முஸ்லிம் மாணவ மாணவிகள் வந்தே மாதரம் பாடினார்கள் என்பதும் உணமையே. மேலும் மற்ற மதங்களைச் சார்ந்த சில தீவிரவாத இயக்கங்கள் வந்தே மாதரம் பாடக் கூடாது என்று கட்டளை இட்டிருந்தாலும் அம்மதத்தவர்கள், பாடலின் நூற்றண்டின் போது, அக்கட்டளைகளை மீறிப் பாடவே செய்தார்கள் என்பதும் உண்மையே.

இதில் கேவலமான விஷயம் என்னவென்றால், மற்ற மதகுருமார்களின் கட்டளைகளை அம்மதங்களைச் சார்ந்த மக்களே சட்டை செய்யாமல் தேசப் பற்றுடன் வந்தே மதரம் பாடலைப் பாடும்போது, அக்கட்டளைகளை தேச விரோதச் செயல் என்று கண்டிக்க வேண்டிய அரசாங்கமும் ஐ.மு.கூ அரசியல் வாதிகளும் ”போலி மதச்சார்பின்மை”யுடன் கோழைகளாகத் திராணியின்றி இருப்பது தான்.

தருல் உலூமின் கட்டளை அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது

ஜமாத் உலேமா-இ-ஹிந்த், “நாங்கள் எங்கள் நாட்டை விரும்புகிறோம். ஆனால் அதற்காக நாங்கள் பெரிதும் தொழுது வணங்கும் அல்லாஹ்வின் நிலைக்கு நாட்டை உயர்த்த முடியாது….தருல் உலூம் வந்தே மாதரத்திற்கு எதிராக இட்ட கட்டளை சரியானதே” என்று குறிபிட்டுள்ளது.

நம் நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களின் அரசியல் ஆசான்களையும், கட்சித் தலைவர்களையும் வணங்கத் தவறுவதில்லை. தமிழகத்தில் கூட திராவிடக்கட்சிகளில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் அக்கட்சித் தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதைக் கண்கூடாக நாம் பார்த்திருக்கிறோம். அத்தலைவர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவார்களாம், ஆனால் தாங்கள் வாழும் தேசத்தை வணங்க மாட்டார்களாம். இது இரட்டை வேடம் இல்லை என்றால், பின் எது?

ஜமாத் மேலும், “தேசத்தை ஒரு அன்னையாகப் பாவித்து, அந்த அன்னையைப் போற்றிப் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது. எங்களின் இந்த நிலைப்பாட்டை வேண்டுமென்றே அரசியலாக்கினால் மத நல்லிணக்கம் கெட்டு சட்ட ஒழுங்குப் பிரச்சனைகள் தான் ஏற்படும்” என்றும் கூறியுள்ளது.

தேசத்தைப் போற்றுவது என்று வரும்போது, போற்றுபவர் இந்துவா, முஸ்லிமா, கிறுத்துவரா, சீக்கியரா, ஜைனரா, பௌத்தரா, கம்யூனிசவாதியா அல்லது நாத்திகரா என்பது சம்பந்தமில்லாத விஷயம். வந்தே மாதரம் பாடலின் முதல் இரண்டு பத்திகளில் எந்த இந்துக் கடவுளும் குறிக்கப் படவில்லையாதலால், அவற்றைப் பாடக் கூடாது என்று முஸ்லிம் மதகுருமார்கள் கட்டளை இட்டுள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இந்த தேசத்தில் உள்ள மற்ற மக்களுடன் தங்கள் ஒற்றுமையையும் இணக்கத்தையும் காண்பிக்கக் கூடிய ஒரு நல்ல வாய்ப்பை அவர்கள் இக்கட்டளை இடுவதன் மூலம் இழந்திருக்கிறார்கள் என்பதே உண்மை. ஜெர்மனி நாட்டிலும் ஃப்ரான்ஸ் நாட்டிலும் வாழும் முஸ்லிம்கள் அந்நாட்டுத் தேசிய கீதங்களைப் பாடுவதன் மூலம் தந்தை நாடுகளான அவற்றைப் போற்றும்போது, இந்திய முஸ்லிம்கள் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளைப் பாடி தாய் நாட்டைப் போற்றுவதில் என்ன தவறு இருக்க முடியும்?

இவ்விடத்தில், எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சந்தியா ஜெயின் அவர்களின் கருத்து நினைவுகொள்ளத் தக்கது. அவர் சில தினங்களுக்கு முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில், “வந்தே மாதரம் பாடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்றால், இருக்கட்டும்; இந்நாட்டின் சட்டங்கள் வேண்டாம், நாங்கள் எங்களின் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி தான் இருப்போம் என்றால் பரவாயில்லை. எங்கள் பெண்களை மதரஸாக்களில் தான் படிக்க வைப்போம், அவர்களுக்கு 13-14 வயதானவுடன் திருமணம் செய்து விடுவோம், என்று உங்கள் விருப்பபடியே இருக்கலாம். ஆனால், தேசிய நீரோட்டத்துடன் கலக்காமல், தேசிய கலாசாரத்தை மதிக்காமல் மத அடையாளத்துடன் மட்டுமே வாழ்வோம் என்றால் உங்கள் வாக்குரிமையை நீங்கள் இழக்க வேண்டும்; இந்திய அரசியலில் பங்கேற்கக்கூடாது; வேட்பாளராக நிற்பதோ தேர்தலில் வாக்குகள் சேகரிப்பதோ செய்யக் கூடாது; பாராளுமன்றத்திலும், சட்டசபைகளிலும், பல அரசு நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு கேட்கக் கூடாது; ஒரு மதக்கூட்டம் போல உங்கள் மத அடையாளத்துடன் மட்டுமே தனியாக வாழ வேண்டியது தான்” என்று ஆணித்தரமாக எழுதியுள்ளார்.

இங்கு கவனிக்கப் பட வேண்டியது அரசியல் சாஸனம் தான். மேலும் அரசியல் நிர்ணய சபை, அரசியல் சாஸனத்தின் மூலம் வந்தே மாதரம் பாடலுக்கு ”தேசிய பாடல்” என்று அழைத்து தேசிய கீதத்திற்குச் சரிசமமான அந்தஸ்தும் கொடுத்துள்ளது. அரசியல் சாஸனம் வந்தே மாதரத்திற்கு, தேசிய கீதத்திற்கு சமமான புனிதத்துவமும், முக்கியத்துவமும் கொடுத்துள்ள படியால், அதற்கு எதிராக முஸ்லிம் மதகுருமார்களின் அமைப்பு கட்டளை இட்டுள்ளது அரசியல் சாஸனத்திற்கு எதிரான, சட்டத்தின் படி தண்டிக்கபட வேண்டிய, தேச விரோதச் செயலாகும்.

தேச பக்தியின் அற்புதம்

நம் தேச விடுதலைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். இவ்விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கலாம். நாம் வாழ்வது இந்த மண்ணில்; இம்மண்ணில் விளையும் காய் கனிகளையும், தாவரங்களையும், தானியங்களையும் தான் உண்டு வாழ்கிறோம்; இம்மண்ணில் ஊற்றெடுத்து வரும் நீரைக் குடித்து தான் நாம் வாழ்கிறோம்; இம்மண்ணில் தான் வீடுகள் கட்டிக் கொண்டு வாழ்கிறோம்; இம்மண்ணின் பயன்கள் அனைத்தையும் பெற்றுக் கொள்ளும் அதே நேரத்தில் இம்மண்ணை மதிக்காமல் மிதித்துத் தான் வாழ்கிறோம்; நாம் தரும் அனைத்து விதமான துன்பங்களையும் இம்மண் தாங்கிக் கொண்டு தன்னுடைய குழந்தைகளாக நம்மைப் பேணுகிறதே! அப்பேற்பட்ட மண்ணை நம் தாயக பாவித்து வணங்குவது நம் தார்மீகக் கடமையல்லவா? அவ்வாறு நாம் வாழும் மண்ணைத் தாயாக மதித்து மரியாதை செய்வதில் மதத்திற்கு என்ன சம்பந்தம்?

ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் இன்றி இந்நாட்டின் அனைத்து குடிமக்களும், இந்நாட்டின் தேசியச் சின்னங்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் இந்த தேசத்தை வணங்கவேண்டும்.


வந்தே மாதரம் தேச பக்தியின் அற்புதம்!


வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

கருணாநிதியை மதிக்காத காங்.!

சென்னை: இந்தியாவின் மூத்த பெரும் தலைவரான முதல்வர் கருணாநிதியை காங்கிரஸ் கட்சி சுத்தமாக ஒதுக்கத் தொடங்கி விட்டது என்பதை சமீப கால நிகழ்வுகள் தெள்ளத் தெளிவாக காட்டி வருகின்றன. இது முதல்வர் கருணாநிதிக்கும் புரியும், இருப்பினும் தனக்கே உரிய சாணக்கியத்தனத்துடன் அவர் அசாதாரண அமைதியை கடைப்பிடித்து வருவதாக திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

முதல்வர் கருணாநிதிக்கு காங்கிரஸ் கட்சி வைத்த முதல் செக் ராகுல் காந்தி மூலமாக வந்தது. ராகுல் காந்தி வருகைக்கு முன்பு வரை, எந்த காங்கிரஸ் தலைவர் சென்னைக்கு வந்தாலும் சத்தியமூர்த்தி பவனுக்கு போகிறாரோ இல்லையோ, முதல் கோபாலபுரம் சென்று முதல்வர் கருணாநிதியை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.

வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் சென்னைக்கு வந்து அவ்வப்போது கருணாநிதியை சந்திப்பது ஒரு சம்பிராதயமாகவே இருந்தது. இதை அப்போது திமுக கூட்டணியில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸே எல்லோரும் கருணாநிதியைத்தான் போய் போய் சந்திக்கிறார்கள் என்று புலம்பும் அளவுக்கு அப்போது கருணாநிதியின் மதிப்பு உயரத்தில் இருந்தது.

ஆனால் ராகுல் காந்தி தமிழகத்தில் 3 நாள் முகாமிட்டு வலம் வந்தார். சென்னையில் கிட்டத்தட்ட ஒன்றரை நாள் இருந்தார். ஆனால் ஒப்புக்குக் கூட அவர் முதல்வரைப் பார்க்கவில்லை. குறைந்தபட்சம் தொலைபேசியில் கூட பேசவில்லை.

சமீபத்தில் தமிழக காங்கிரஸ் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான குலாம் நபி ஆசாத் சென்னைக்கு வந்தார். சத்தியமூர்த்தி பவனுக்குச் சென்றார். திமுக- காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக பேட்டி அளித்தார். ஆனால் முதல்வரை அவரும் சந்திக்கவில்லை.

இதற்கு முத்தாய்ப்பாக மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கைக்குச் சென்றார். டெல்லியிலிருந்தே அவரால் கொழும்பு சென்றிருக்க முடியும். ஆனாலும் சென்னை வந்து அங்கிருந்து கொழும்பு சென்றார். வந்தவர் விமான நிலையத்தில் தங்கினார். அந்த சமயத்தில் அவரை போய் திமுக முக்கியஸ்தரும், உயர் கல்வி அமைச்சருமான பொன்முடி போய் பார்த்தார்.

ஆனால் பிரணாப் முகர்ஜி கருணாநிதியை சந்திக்கவில்லை. குறைந்தபட்சம் போனில் கூட பேசவில்லை.

இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் எந்த நடவடிக்கை எடுத்தாலும், மத்திய அரசு [^] எந்த நடவடிக்கை எடுத்தாலும் கருணாநிதியிடம் ஆலோசனை கலக்கத் தவறுவதில்லை.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, இலங்கை தொடர்பான எந்த விவகாரமாக இருந்தாலும் மெனக்கெட்டு கருணாநிதியை பார்க்க யாரையாவது அனுப்பி வைப்பார்கள் பிரதமரும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும்.

எஸ்.எஸ்.மேனனும், பிரணாப் முகர்ஜியும் இலங்கை விவகாரம் [^] தொடர்பாக பலமுறை சென்னை வந்து கருணாநிதியை சந்தித்துள்ளனர்.

ஒன்று இலங்கைக்குப் போவதற்கு முன்பு சந்திப்பார்கள். அல்லது இலங்கை போய் விட்டு வந்த பின்னர் யாரையாவது அனுப்பி விளக்குவார்கள்.

ஆனால் சமீபத்திய பிரணாபின் இலங்கைப் பயணத்தில் கருணாநிதி கிட்டத்தட்ட இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்தில் பிரணாபை போய்ச் சந்தித்த பொன்முடி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், சம்பிரதாய நிமித்தமாகவே பிரணாப் முகர்ஜியை வரவேற்க வந்தேன். மற்றபடி முதல்வர் கருணாநிதியிடமிரு்நது பிரணாபுக்கு எந்த செய்தியும், கடிதமும் இல்லை என்று தெரிவித்தார். மேலும், இலங்கை பயணத்திற்குப் பின்னர் கருணாநிதியை பிரணாப் தொடர்பு கொண்டு பேசக் கூடும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஆனால் நேற்றே டெல்லி திரும்பி விட்ட பிரணாப் முகர்ஜி [^] இதுவரை முதல்வரைத் தொடர்பு கொண்டதாகத் தெரியவில்லை.

காங்கிரஸ் மேலிடம் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இந்த நிகழ்வுகளைப் பார்க்கும்போது திமுகவையும், முதல்வர் கருணாநிதியையும், ஏன், தமிழகத்தையும் கூட அது புறம் தள்ளத் தொடங்கி விட்டதோ என்றுதான் யோசிக்கத் தோன்றுவதாக விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கிறார்கள்.

அதேபோல தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் கூட திமுகவுக்கு எதிரான வெறுப்புணர்வு நாளுக்கு நாள் வலுவடையத் தொடங்கியுள்ளது.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சமீப காலமாக மிகக் கடுமையாக திமுகவைத் தாக்கிப் பேசத் தொடங்கியுள்ளார். முன்பெல்லாம் இப்படிப் பேசினால் படு கோபமாக காங்கிரஸ் மேலிடத்தை திமுக தொடர்பு கொள்ளும், காங்கிரஸ் மேலிடமும் இளங்கோவனை சற்று தட்டி வைக்கும்.

ஆனால் இந்த முறை திமுக தரப்பிலிருந்து பலத்த அமைதியே பதிலாக வருகிறது. காங்கிரஸ் மேலிடமும் இளங்கோவனை அமைதிப்படுத்த முயல்வதாகத் தெரியவில்லை.

சென்னையில் திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய காங்கிரஸ் தலைவர்கள் பலரும் திமுகவை கிட்டத்தட்ட எச்சரிக்கும் வகையிலேயே பேசினார்.

காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் சுதர்சனம் பொத்தாம் பொதுவாக காங்கிரஸ் மீண்டும் தமிழகத்தில் முதலிடத்தைப் பிடிக்க வேண்டும் என்று பேசி வைத்தார்.

போளூர் எம்.எல்.ஏ. விஜயக்குமார் படு பகிரங்கமாக, முதல்வர் கருணாநிதியை ராகுல் காந்தி [^] சந்திக்காதது பாராட்டுக்குரிய விஷயம். அவரது இந்த செயல் ஒட்டுமொத்த காங்கிரஸாரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியதாக அமைந்தது என்று கூறி திமுகவையும், கருணாநிதியையும் மொத்தமாக அவமானப்படுத்தியுள்ளார்.

ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவோ எதுவும் பேசவில்லை. அவருக்கு சென்னையில் சுயநிதி பொறியியல் கல்லூரி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படி காங்கிரஸ் தரப்பு தொடர்ந்து முதல்வரையும், திமுகவையும் சீண்டி வரும் நிலையில் நேற்று நடந்த முக்தா சீனிவாசன் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி, திமுக- காங்கிரஸ் கூட்டணி நீடித்தால்தான் நாட்டுக்கு நல்லது, தமிழகத்திற்கு நல்லது. திமுக, காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது, இது நீடிக்கும் என்று பேசியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இப்படி உள்ளுக்குள் பூகம்பங்கள், சுனாமிகள் சுழன்றடித்துக் கொண்டிருந்தாலும் வெளியில் அமைதி தவழ்வது போல இரு கட்சிகளும் காட்டிக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை. எதற்காக இந்த அமைதி, எதுவரை இந்த அமைதி என்பதுதான் மி்ல்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம்

சென்னை: மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற முதல்வர் கருணாநிதி [^] செய்யும் துரோகம் மிகக் கொடுமையானது. இதனால் தமிழினம் அவரை ஒருபோதும் மன்னிக்காது

அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு பிரபாகரன் [^] எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இலங்கையில் இன்றைய விளைவுகள் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருந்தார்.

தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள் [^]மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை.

இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. ராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு.

புலிகளின் 14 கப்பல்களை மூழ்கடித்தது இந்தியா:

இந்திய-இலங்கைக் கடற்படைத் தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப் புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு.

சீனா, பாகிஸ்தான் [^], இஸ்ரேல், ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குவதற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004ம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது.

இத்தனை உதவிகளோடும், ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று லட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் முதல்வர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரனை கொச்சைப்படுத்தி, கொடும் பழி சுமத்தி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்.

துரோகிக்குப் பெயர்தான் மாவீரனா...?:

பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார்.

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (RAW) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித் திட்டம் அம்பலமானது.

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள்.

பிரபாகரனை காத்த பொட்டு:

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப் படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலை செய்ய சதித் திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப் படமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று முதல்வர் கருணாநிதி வருந்துகிறார்.

கருணாவே நேசிக்கும் கருணாநிதி:

அது மட்டும் அல்ல, ‘பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின’ என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது.

மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, ‘பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது’ என்கிறார்.

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா?. ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா?. அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன்.

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சனையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார்.

தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா?. ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார்.

முதல்வர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்.

ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்...

ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரணில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் [^] வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரணில் சொன்னதை இவர் எழுதுகிறார்.

ரணில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவது என்பதை, தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் [^] அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

"...எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரணிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரணிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக் கவனத்தையும் செலுத்தியது.

இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003ம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்...".

கருணாவை துரோகியாக்கிய ரணில்...

‘தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை’ அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி [^]. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரணில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார்.

அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், 'இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்’ என்று ரணில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை.

ராஜீவ் காந்தியின் துரோகம்:

ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார் கருணாநிதி. இந்திய ராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் தூதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய ராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நூலில் எழுதி இருக்கிறாரே?. டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு?. அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான்.

கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை.

பத்துப் பதினைந்து 'நிலைய வித்துவான்கள்':

காலம், நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து 'நிலைய வித்துவான்'களை வைத்துக் கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத் தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைத்திருப்ப படாதபாடுபடுகிறார்.

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், ராஜராஜன்
பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப்படுத்தி விட முடியாது.

தன்னிகரற்ற தலைவன்:

ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் [^] அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜ தந்திரத்திலும் தன்னிகரற்ற தலைவராக விளங்குகிறார்.

ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர்.

புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான- மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் முதல்வர் கருணாநிதி.

'மௌனத்தின் குதூகலம்' யார் அறிவார்?:

2009 ஈழப் போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த 'மௌனத்தின் குதூகலம்' யார் அறிவார்?.

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம்:

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலை பாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது...!" என்று கூறியுள்ளார் வைகோ.

Source:thatstamil.in

இரவு நேரங்களில் மூக்கடைப்பு காரணமா

சில எளிய உபகரணங்களைக் கொண்டு சில கிரியைகளை செய்வதால் நேரம், மருத்துவ செலவு, போன்றவைகளை வெகுவாகக் குறைத்து உடல் உபாதையின்றி மகிழ்ச்சியுடன் வாழலாம். நவம்பர் - ஜனவரி மாதங்கள் வரை பனிகாலமாக இருப்பதால் சளி, கபம், சைனஸ், ஆஸ்தமா போன்ற தொல்லைகளால் அநேகர் அவதிபடுவதை பார்த்திருக்கிறேன். இரவு நேரங்களில் மூக்கடைப்பு காரணமாய் தூக்கத்தை இழக்கும் நபர்களும் உண்டு. குறிப்பாக இந்த பருவத்திலும் குளிர்பதன அறையில் இருந்து வேலை செய்பவர்களுக்கு தொடர் ‘தும்மல்’ தவிர்க்க முடியாதது. வாழ்கை முறை, உணவு முறை மாறியதும் காரணம். நமது பாரம்பரிய முறையில் இதனை எளிதாக குணப்படுத்தலாம்.

இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு இந்த “ஜல நேத்தி” என்னும் மூக்கு கழுவும் கிரியைதான். சுமார் 1 அல்லது 2 மேசை கரண்டி உப்பை மிதமான வெப்பநிலையிலுள்ள சுத்தமான நீரில் நன்கு கலக்கி மேற்கண்ட குவளையில் ஊற்றி உடம்பை சற்று வளைத்து முன்நோக்கி வைத்து தலையை சற்று சாய்த்து மூக்கு துவாரத்தில் குவளையின் துவாரத்தை பொருத்திவிட்டால் நீர் அடைப்பில்லாமல் இருந்தால் எளிதாக அடுத்த துவாரத்தில் வந்துவிடும்.

சளி இருந்தால் அதனையும் சவ்வூடு பரவல் (Osmosis) முறையில் அடர்த்தியின் காரணமாய் இழுத்துகொண்டு வந்துவிடும். நீர் மூக்கினுள் செல்லும்போது வாய் வழியாக சுவாசிக்கவும்.

பிறகு மாற்றி அடுத்த துவாரத்தில் வைத்து செய்ய வேண்டும். உறிஞ்சக்கூடாது. குளிர்ந்த நீரை ஆரம்பத்தில் தவிர்க்கவும். சிலருக்கு உடனடியாக நீர் வெளிவராது பழக பழக சரியாகிவிடும். இல்லையெனில் அனுபவசாலிகளின் மேற்பார்வையில் செய்து பழகவும். இது பாரம்பரிய முறை இருப்பினும் கவனம் தேவை.ரூ.15/= விலையில் சர்வோதய சங்கக் கடைகளில் இக்குவளை கிடைக்கும்.