Wednesday, August 12, 2009

பன்றிக் காய்ச்சலைத் தடுக்க.

பன்றிக் காய்ச்சல் பயந்து நடுங்கும் அளவுக்கு மிக மிக ஆபத்தானதல்ல. அதைக் குணப்படுத்த முடியும். பன்றிக் காய்ச்சலைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், வந்தால் செய்ய வேண்டியவை குறித்தும் சில தகவல்கள்...

இருமல், சளி, கடும் காய்ச்சல், தொண்டை வலி, களைப்பு, தலைவலி, வயிற்றுப் போக்கு, உடல் வலி, மூக்கு ஒழுகுதல், தும்மல், எடைக் குறைவு போன்றவையே பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும்.

இவை தென்பட்டால், உடனடியாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பன்றிக் காய்ச்சல் பரிசோதனை நிலையத்திற்கு சென்று அங்கு முறைப்படி பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம்.

பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் வழிகள்...

வரும் முன் காப்போம் என்ற அடிப்படையில் பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது நலம்.

தற்போது பன்றிக் காய்ச்சல் பரவி வருவதால் மக்கள் அதிக அளவில் கூடும் ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்றவற்றுக்கு செல்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.

என்-95 என்ற வகை முகக் கவசத்தை அணிந்து கொள்வது அல்லது நல்ல கைக்குட்டையால் மூக்கு, வாய் ஆகிய பகுதிகள் மூடும்படியாக அணிந்து கொண்டு வெளியில் செல்வது நல்லது.

இருமல், சளி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களிடம் நெருங்குவதைத் தவிர்க்க வேண்டும்.

மது அருந்துவோருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பரவல் எளிதாக இருக்கும் என்பதால் மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

இருமும்போதோ அல்லது தும்மும்போதோ கைக்குட்டையால் வாய்ப் பகுதியை மூடிக் கொண்டு செய்வது நல்லது.

தினசரி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 10 டம்பளர் தண்ணீராவது அருந்துவது அவசியம்.

கீரை உள்ளிட்ட சத்தான உணவு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. அதிக அளவில் பழங்களைச் சேர்த்துக் கொள்வதும் நல்லது.

பன்றிக் காய்ச்சலுக்கான மாத்திரையான டமிஃப்ளூ அரசு மருத்துவமனைகளில் மட்டுமே கிடைக்கும். அதை நாமாக வாங்கி சாப்பிட முடியாது. அது கடும் பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது என்பதால், அரசு அதை கட்டுக்குள் வைத்து அரசு மருத்துவமனைகள் மூலமாக மட்டுமே விநியோகித்து வருகிறது.

தமிழகத்தில் தேர்ந்தெடுத்த சில மருத்துவமனைகள் மற்றும் ஆய்வு மையங்களில் பன்றிக் காய்ச்சல் குறித்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை வழங்கப்படுகிறது.

சென்னையில் தண்டையார்பேட்டை மாநகராட்சி தொற்று நோய் மையம், அரசு பொது மருத்துவமனை மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றில் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.

இவை தவிர மாவட்ட அரசு பொது மருத்துவமனைகளிலும் தனி வார்டுகள் பன்றிக் காய்ச்சலுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இருமல், சளி, காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டால் உடனே அது பன்றிக் காய்ச்சல்தான் என்று பீதி அடைந்து விடாமல், உரிய டாக்டர்களை அணுகினால், பன்றிக் காய்ச்சல் பாதிப்பை தவிர்க்க முடியும்.

No comments:

Post a Comment